Prayers & Meditations

Tamil · Bahá'u'lláh

Add range:

இருபத்து நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை கூறப்படவேண்டும்.

எவர் இப்பிரார்த்தனையைக் கூற விரும்புகின்றாரோ, அவர் எழுந்து நின்று கடவுள்பால் திரும்புவாராக. அவர் அவ்வாறு நிற்கையில் பெருங் கருணையும் இரக்கமும் கொண்ட அவரது ஆண்டவரின் கருணையை எதிர்பார்த்திருப்பது போன்ற பாவனையில் வலப்புறமும் இடப்புறமும் அவரது பார்வையைச் செலுத்தட்டும். பின் அவர் இவ்வாறு கூறுவாராக:

நாமங்கள் அனைத்திற்கும் அதிபதியும் விண்ணுலகங்களைப் படைத்தவரும் நீரே! அதி மேன்மையும் எல்லா மகிமையும் மிக்க, கண்ணுக்குப் புலனாகா, உமது சாராம்சத்தின் பகலூற்றுகள் மூலமாக உம்மை இறைஞ்சு கின்றேன். என் பிரார்த்தனையை உமது அழகிலிருந்து என்னை மறைத்திடும் திரைகளை எரித்திடும் நெருப்பாகவும் உமது முன்னிலை எனும் சமுத்திரத்திற்கு வழிகாட்டிடும் ஒளி விளக்காகவும் ஆக்கிடுவீராக.

பிறகு ஆசீர்வதிப்பும் மேன்மையும் மிக்கக் கடவுள்பால் அவர் தமது கரங்களை இறைஞ்சிக் கேட்கும் பாவனையில் உயர்த்தி இவ்வாறு கூறுவாராக:

உலகின் ஆவலானவரே! நாடுகளின் நேசரே! உம்மைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் உள்ள பற்றினைத் துறந்து, உமது இயக்கத்தின் மூலம் படைப்பினம் முழுவதையுமே கிளர்ந்தெழச் செய்த உமது கயிற்றினை இறுகப் பற்றி, உம்மை நோக்கி நான் திரும்பியுள்ளதை நீர் காண்கின்றீர். என் பிரபுவே, நான் உமது ஊழியனும் உமது ஊழியனின் மைந்தனுமாவேன். உமது விருப்பத்தினையும் உமது அவாவினையும் நிறைவேற்ற நான் சித்தமாய் நிற்பதையும் உமது நல்விருப்பத்தையன்றி மற்ற எதனையும் நான் விழையாதிருப்பதையும் காண்கின்றீர். உமது ஊழியனை உமது விருப்பத்தின்படியும் திருவுளத்தின்படியும் நடத்துமாறு உமது கருணை என்னும் சமுத்திரத்தின் மூலமாகவும் கிருபை என்னும் பகல் நட்சத்திரத்தின் மூலமாகவும் உம்மை நான் மன்றாடிக் கேட்கின்றேன். எல்லாக் குறித்துரைக்கும் புகழ்ச்சிக்கும் அதி மேலான உமது வலிமையின் சாட்சியாக! உம்மால் வெளிப்படுத்தப்பட்டது எதுவோ அதுவே என் இதயத்தின் ஆவலும் என் ஆன்மாவின் அன்புக்குரியதுமாகும். கடவுளே, என் கடவுளே, எனதாவல்களையும் எனது செய்கைகளையும் கண்ணுறாதீர்! மாறாக, மண்ணுலகையும் விண்ணுலகங்களையும் உள்ளடக்கியுள்ள உமது விருப்பத்தினையே கண்ணுறுவீராக. தேசங்கள் யாவற்றுக்கும் பிரபுவானவரே, உமது அதி உயரிய நாமத்தின் சாட்சியாக! நீர் விரும்பியதையன்றி வேறெதனையும் நான் விரும்பியதில்லை; நீர் எதனை நேசிக்கின்றீரோ அதனையே நானும் நேசிக்கின்றேன்.

பின் அவர் மண்டியிட்டுத் தன் நெற்றியைத் தரையை நோக்கித் தாழ்த்தி இவ்வாறு கூறுவாராக:

உம் ஒருவரது வருணனையைத் தவிர மற்றெல்லாரது வருணனைக்கும், உமது ஒருவரது புரிந்துகொள்ளலைத் தவிர மற்றெல்லாரது புரிந்துகொள்ளலுக்கும் அதி மேலானவர் நீரே.

பின் அவர் எழுந்து நின்று இவ்வாறு கூறுவாராக:

என் பிரபுவே, என் பிரார்த்தனையை ஒரு ஜீவநீர் ஊற்றாக ஆக்குவீராக. அதனால் உமது அரசுரிமை நிலைத்திருக்கும் வரை நான் வாழ்ந்து, உமது உலகங்கள் ஒவ்வொன்றிலும் உம்மைப் பற்றிக் கூறிடுவேன்.

பின் அவர் மீண்டும் தன் கரங்களை இறைஞ்சிக் கேட்கும் பாவனையில் உயர்த்தி, இவ்வாறு கூறுவாராக:

உம்மிடமிருந்து பிரிவுற்றதால் இதயங்களும் ஆன்மாக்களும் உருகின; உமது அன்புத் தீயினால் உலகமுழுமையும் கிளர்ச்சி கொண்டது! மனிதர் யாவர் மீதும் ஆட்சி புரிபவரே! படைப்பினம் முழுவதையும் கீழ்ப்படியச் செய்த உமது நாமத்தின் சாட்சியாக உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன்; உம்மிடம் இருப்பதை எனக்குக் கொடுக்காது இருந்து விடாதீர்! என் பிரபுவே, உமது கம்பீரம் என்னும் விதானத்தின் கீழும் உமது கருணை என்னும் எல்லைகளுக்குள்ளாகவும் உள்ள தனது அதி உயரிய உறைவிடத்தை நோக்கி இந்த அந்நியன் விரைந்து செல்வதையும், இப்பிழையோன் உமது மன்னிப்பு எனும் சமுத்திரத்தையும், இத்தாழ்ந்தோன் உமது புகழ் எனும் அவையினையும் இவ் வறிய சிருஷ்டியானவன் உமது செல்வம் எனும் ஒளிச்சுடரையும் தேடுவதை நீர் காண்கின்றீர். நீர் எதனை விரும்புகின்றீரோ அதனைக் கட்டளையிடும் அதிகாரம் உமக்கே உரியதாகும். உமது செயல்களில் நீர் போற்றப்பட வேண்டும் என்பதற்கும் உமது கட்டளைகளில் நீர் வணங்கிடப்பட வேண்டும் என்பதற்கும் உமது ஆணைகளில் நீர் என்றும் கட்டுப்படுத்தப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்கும் நானே சாட்சி.

பின் அவர் தன் கரங்களை உயர்த்தி, அதி உயரிய நாமத்தை மும்முறை உச்சரிக்க வேண்டும். பிறகு அவர் புகழும் மேன்மையும் மிக்க இறைவன் முன் குனிந்த பாங்கில் தன் கரங்களை முழங்கால் முட்டுவில் வைத்து இவ்வாறு கூறுவாராக:

என் கடவுளே, உம்மை வழிபடும் தனது ஏக்கத்திலும், உம்மை நினைவு கூர்வதிலும், உம்மை உயர்த்திப் புகழ்வதிலும், அது கொண்ட பேராவலில் எங்ஙனம் எனதான்மா எனது அங்கங்களிலும் அவயவங்களிலும் கிளர்ச்சியுறச் செய்யப்-பட்டுள்ளது என்பதையும், எதற்கு உமது வெளியிடுகை என்னும் இராஜ்யத்திலும், உமது அறிவு என்னும் சுவர்க்கத்திலும், உமது கட்டளை என்னும் நா சாட்சியம் கூறிற்றோ, அதற்கு எங்ஙனம் எனதான்மா சாட்சியம் கூறுகின்றது என்பதையும் நீர் காண்கின்றீர். என் பிரபுவே, இந் நிலையில் உம்மிடமுள்ள யாவற்றையும் எனக்குத் தந்து அருளுமாறு உம்மை மன்றாடிக் கேட்க விழைகின்றேன். அதனால், நான் எனது வறுமையை மெய்ப்பித்துக் காட்டி உமது அருட்கொடையினையும் செல்வங்களையும் மிகைப்படுத்திடவும் எனது வலுவின்மையைப் பிரகடனப்படுத்தி, உமது ஆற்றலையும் வலிமையையும் வெளிப்படுத்தவும் கூடும்.

பின் அவர் எழுந்து நின்று இறைஞ்சிக் கேட்கும் பாவனையில் தன் கரங்களை இரு முறை உயர்த்தி, பின் இவ்வாறு கூறுவாராக.

சர்வ வல்லமை பொருந்தியவரும், மாபெரும் வள்ளலுமான கடவுள் உம்மையன்றி வேறிலர். ஆதியும் அந்தமும் ஆகிய இரண்டிலும் விதித்தருளும் இறைவன் உம்மையன்றி வேறிலர். கடவுளே, என் கடவுளே, உமது மன்னிக்குந் தன்மை எனக்குத் துணிவைத் தந்தது; உமது கருணை என்னைப் பலப்படுத்தியது; உமது அழைப்பு என்னை விழிப்புறச் செய்தது; உமது கிருபை என்னை எழச் செய்து, உந்தன்பால் வழிநடத்திச் சென்றது. அவ்வாறில்லையெனில் உமது அருகாமை எனும் நகரின் முன் வாயிலில் துணிவுடன் நிற்கவோ, உமது விருப்பம் என்னும் சுவர்க்கத்திலிருந்து ஒளிரும் விளக்குகளின்பால் எனது முகத்தைத் திருப்பவோ நான் யார்? என் பிரபுவே, இந்த ஈன சிருஷ்டியானவன் உமது கிருபை என்னும் கதவினைத் தட்டுவதையும் அநித்தியமான இவ்வான்மா உமது அருட்கொடை என்னும் கரங்களிலிருந்து நித்திய வாழ்வு என்னும் நதியைத் தேடுவதையும் நீர் காண்கின்றீர். நாமங்கள் யாவற்றுக்கும் அதிபதியே, எல்லாக் காலங்களிலும் ஆணையிடும் அதிகாரம் உமக்கே உரியதாகும். விண்ணுலகங்களைப் படைத்து அருளியவரே, உமது விருப்பத்திற்குச் சரணடைந்து, உளமாறக் கீழ்ப்படிதல் எனக்குரியதாகும்.

பிறகு அவர் தன் கரங்களை மும்முறை மேலுயர்த்தி, (ஒவ்வொரு முறை கரங்களை மேலுயர்த்தும் போதும்) இவ்வாறு கூறுவாராக:

உயர்ந்தோர் ஒவ்வொருவரினும் அதி உயர்ந்தவர் இறைவனே!

பிறகு அவர் மண்டியிட்டுத் தன் நெற்றியைத் தரையை நோக்கித் தாழ்த்தி இவ்வாறு கூறுவாராக:

உமது அருகில் உள்ளோர்களின் புகழுரை உமது அருகாமை என்னும் சுவர்க்கத்தை நோக்கிச் செல்லவோ, உம்மிடம் பக்தி கொண்டோரின் இதயங்கள் என்னும் பறவைகள் உமது வாயிற் கதவினை அடையவோ இயலாத அளவிற்கு நீர் அதி உயர்ந்திருக்கின்றீர். பண்புகள் அனைத்திற்கும் மேலாகப் பரிசுத்தமானவராயும் நாமங்கள் அனைத்திற்கும் மேலாகப் புனித மிக்கவராயும் இருந்திருக்கின்றீர் என்பதற்கு நானே சாட்சி. அதி மேன்மைமிக்கவரும் சகல மகிமை பொருந்தியவருமான கடவுள் உம்மையன்றி வேறிலர்.

பிறகு அவர் அமர்ந்தவாறு இவ்வாறு கூறுவாராக:

நீரே கடவுள், உம்மையன்றி கடவுள் வேறிலர் என்பதற்கும் அவதரிக்கச் செய்யப்பட்டுள்ளவர், மறைபுதிரும் பொக்கிஷமும் எனப் பாதுகாக்கப்பட்ட சின்னமுமானவர் என்பதற்கும் அவர் மூலமே “ஆ” மற்றும் “கு” (ஆகு) என்பதன் அட்சரங்கள் இணைக்கப்பட்டு ஒன்றாய்ப் பின்னப்பட்டுள்ளன என்பதற்கும் எல்லாப் படைப்பினங்களும் உயர்விலுள்ள விண் கூட்டத்தினரும் அதி உயர்வான சுவர்க்கவாசிகளும் அவற்றுக்கும் அப்பால் சர்வ மகிமை பொருந்திய அடிவானத்திலிருந்து மகோன்னதரின் நாவும் சாட்சியம் அளித்திருத்திருப்பதற்கும் நானும் சாட்சியம் அளிக்கின்றேன். அதி பெரும் உயர்வுமிக்கோனின் எழுதுகோலால் குறிக்கப்- பட்டுள்ளவரும் மேலுலக அரியணைக்கும் மண்ணுலக அரியணைக்கும் அதிபதியாகிய கடவுளின் திருநூல்களில் குறிப்பிடப்- பட்டுள்ளவரும் அவரே என்பதற்கு நான் சாட்சியம் கூறுகின்றேன்.

பிறகு எழுந்து நின்று இவ்வாறு கூறுவாராக:

படைப்பினம் அனைத்திற்கும் அதிபதியே! கண்ணுக்குப் புலனாகும், புலனாகா அனைத்தையும் உடைமையாகக் கொண்டவரே! நீர் என் கண்ணீரையும் நான் விடும் பெருமூச்சினையும் காண்கின்றீர்; என் வேதனைக் குரலையும் என் புலம்பலையும் என் இதயத்தின் கதறலையும் கேட்கின்றீர். உமது வல்லமையின் சாட்சியாக! எனது வரம்பு மீறிய செயல்கள் உம்மை நெருங்கி வருவதினின்று என்னைத் தடுத்துள்ளன; எனது பாவங்கள் உமது புனித அவையிலிருந்து என்னைத் தூரத்தே நிறுத்தி வைத்துள்ளன. என் பிரபுவே, உமது அன்பு என்னைச் செல்வந்தனாக்கியுள்ளது; உம்மிடமிருந்து பிரிவு என்னை அழித்துள்ளது. உம்முடன் தொடர்பின்மை என்னை இல்லாதானாக்கியுள்ளது. இவ் வனாந்திரத்தில் உமது அடிச்சுவடுகளின் சாட்சியாகவும், இம்முடிவில்லா பெரும் பரப்பினில் உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டோர் உதிர்த்திட்ட “இதோ நான் இங்கே, இதோ நான் இங்கே”, என்னும் சொற்களின் சாட்சியாகவும், உமது வெளிப்பாட்டின் மூச்சுகளின் சாட்சியாகவும், உமது அவதாரம் என்னும் அதிகாலையின் தென்றல் காற்றுகளின் சாட்சியாகவும் உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன்; உமது அழகினைக் கண்ணுறவும், உமது புனித நூலில் உள்ளனவற்றை யெல்லாம் பின்பற்றவும் எனக்கு அருள்பாலிப்பீராக.

பிறகு அவர் அல்லா-உ-அப்ஹா எனும் அதி உயரிய நாமத்தை மும்முறை உச்சரிக்க வேண்டும். பிறகு குனிந்த பாங்கில் தனது கரங்களை முழங்கால் முட்டுவில் வைத்து இவ்வாறு கூறுவாராக:

என் கடவுளே, நான் உம்மை நினைவு கூர்ந்து போற்றிப் புகழ்ந்திட உதவியமைக்காகவும், உமது அடையாளங்களின் பகலூற்றான அவரை நான் அறிந்திடச் செய்தமைக்காகவும், உமது பிரபுத்துவத்தின் முன்னிலையில் என்னைத் தலை வணங்கச் செய்தமைக்காகவும், உமது இறையம்சத்தின் முன்னிலையில் என்னைப் பணிவாக நடந்திடச் செய்தமைக்காகவும், உமது மகோன்னதத்தின் நாவினால் நவின்றவற்றினை ஏற்றுக் கொள்ளச் செய்தமைக்காகவும் நீர் போற்றப்படுவீராக.

பிறகு அவர் நிமிர்ந்து நின்று இவ்வாறு கூறுவாராக:

கடவுளே, என் கடவுளே! என் பாபச் சுமையினால் எனதுடல் வளைமுதுகாகியது. எனது கவனமின்மை என்னை அழித்துள்ளது. எனது தீயச் செயல்களையும் உமது தயவினையும் நான் ஆழ நினைத்திடும் போதெல்லாம் என் நெஞ்சம் என்னுள் உருகுகின்றது; என் நாளங்களில் என் இரத்தம் கொதிக்கின்றது. உலகின் ஆவலே! உமது அழகின் சாட்சியாகக் கூறுகின்றேன்; உம் முன் என் முகத்தை உயர்த்திட நாணுகின்றேன்; உமது அருட்கொடை என்னும் சுவர்க்கத்தை நோக்கி நீண்டிட என் ஏங்கும் கரங்கள் வெட்கங் கொள்கின்றன.

மேலுலக அரியணைக்கும் கீழே மண்ணுலக அரியணைக்கும் அதிபதியானவரே, எங்ஙனம் என் கண்ணீர் உம்மை நினைவு கூர்வதிலிருந்தும் உமது பண்புகளைப் போற்றுவதிலிருந்தும் என்னைத் தடுத்துள்ளது என்பதை நீர் காண்கின்றீர். படைப்பிற்கெல்லாம் அதிபதியே! கண்ணுக்குப் புலனாகும் கண்ணுக்குப் புலனாகா அனைத்திற்கும் அரசரே! உமது இராஜ்யத்தின் அடையாளங்களின் சாட்சியாகவும் உமது அரசாட்சியின் மர்மங்களின் சாட்சியாகவும் உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன்; உமது அன்பர்களை உமது அருட்கொடைக்கும் கிருபைக்கும் பொருந்த நடத்திடுவீராக.

பிறகு “அல்லா-உ-அப்ஹா” என்னும் அதி உயரிய நாமத்தை மும்முறை உச்சரித்ததும், மண்டியிட்டுத் தன் நெற்றியினால் தரையைத் தொட்டு இவ்வாறு கூறுவாராக:

என் கடவுளே, உமது அருகாமைக்கு எங்களை ஈர்க்கக் கூடியவற்றினை எங்கள்பால் அருளியமைக்காகவும் உம்மால் அனுப்பப்பட்ட திருநூல்களிலும் மறைநூல்களிலும் எங்களுக்குத் தந்து அருளிய ஒவ்வொரு நன்மைக்கும் உமது புகழ் போற்றி. என் பிரபுவே, எண்ணிலடங்கா பயனற்றக் கனவுகளிலிருந்தும் வீண் கற்பனைகளிலிருந்தும் எங்களைக் காத்தருளும்படி உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். மெய்யாகவே வல்லவரும் எல்லாம் அறிந்தவரும் நீரே.

பிறகு அவர் தன் சிரசினை உயர்த்தி, அமர்ந்தவாறு இவ்வாறு கூறுவாராக:

என் கடவுளே, உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டோர் எதற்குச் சாட்சியம் கூறினரோ அதற்கு நானும் சாட்சியம் கூறுகின்றேன். மிக உயர்வான சுவர்க்கத்தின் வாசிகளும், உமது ஆற்றல் மிக்க அரியணையை வலம் வருபவர்களும் எதனை ஏற்றுக் கொண்டனரோ அதனை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். உலகங்களின் பிரபுவே, மண்ணுலக இராஜ்யங்களும் விண்ணுலக இராஜ்யங்களும் உமக்கே உரியவையாகும்.

என் கடவுளே, யாவற்றுக்கும் மேலான பேரொளி எனும் உமது திருநாமத்தினால், உமது அன்புக்குரியவர்களை நீதி எனும் அங்கியினால் அணிவித்து, அவர்களின் உயிருருவை நம்பிக்கைக்குப் பாத்திரமாய் இருத்தல் எனும் ஒளியால் ஒளிரச் செய்யுமாறு நான் உம்மை இறைஞ்சுகிறேன். நீர் விரும்பியவாறு செய்யவல்ல சக்தியுள்ளவரும்; கண்ணுக்குப் புலனாகும், புலனாகா அனைத்துப் பொருள்களின் அதிகாரத்தை உமது பிடிக்குள் வைத்திருப்பவரும் நீர் ஒருவர் மட்டுமே.

இந் நிருபம் பஹாவுல்லா, பாப் ஆகியோரின் புண்ணிய ஸ்தலங்களில் வாசிக்கப்படவேண்டும். அவர்களின் ஆண்டு நினைவு நாள்களை நினைவு கூர்வதற்கும், இந் நிருபம் பயன்படுத்தப்படுகின்றது.

பேரழகின் வெளிப்படுத்துதலே, நித்தியத்தின் மன்னரே, மண்ணுலகிலும், விண்ணுலகிலும் உள்ளோர் அனைவருக்கும் பிரபுவானவரே! உமது அதி மேன்மைமிகு தானெனும் தன்மையிலிருந்து உதித்துள்ள புகழ்ச்சியும், உமது ஜோதிமிகு அழகிலிருந்து பிரகாசித்திடும் ஒளியும் உம்மீது இலயித்திடுமாக! உம் மூலமாகவே ஆண்டவனின் இறைமையும் அவரது அரசும், அவரது மகிமையின் மேன்மையும், வெளிப்படுத்தப்பட்டு, பூர்வீக ஒளியின் விடிவெள்ளிகள் உமது மாற்றவியலாத கட்டளையெனும் வானத்தைப் பிரகாசமடையச் செய்து, படைப்புகளின் மீது, அரூபியானவரின் அழகினை வியாபிக்கச் செய்துள்ளீர் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகின்றேன். உமது எழுதுகோலின் ஒரே அசைவினால் உமது “ஆகு” என்னும் கட்டளை நிறைவேற்றப்பட்டுள்ளது, இறைவனின் மறைந்துள்ள மர்மங்கள் வெளிப்படுத்தப்-பட்டுள்ளன; படைப்புப் பொருள்களெல்லாம் சிருஷ்டிக்கப்பட்டு, வெளிப் படுத்துதல்கள் யாவும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்பதற்கு, நான் மேலும் சாட்சியம் பகர்கின்றேன்.

உமது அழகின் வாயிலாக, அன்புக்குப் பாத்திரமானவரின் அழகு வெளிப்படுத்தப்-பட்டுள்ளது என்பதற்கும், உமது வதனத்தின் மூலமாக ஆவலுக்குரியவரான அவரின் வதனம் ஒளிர்வுற்றுள்ளது என்பதற்கும், உம்மிடமிருந்து ஒரே சொல்லினால் நீர் படைப்புப் பொருள்கள் அனைத்திற்கும் இடையே தீர்ப்பளித்து, அதன்மூலம் உந்தன்பால் பக்தி கொண்டோரை, ஒளி என்னும் உச்சத்தை அடையவும், சமய நம்பிக்கையற்றோரை அதிபாதாளத்தில் தள்ளவும் செய்துள்ளீர் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கின்றேன்.

உம்மை அறிந்தவர் கடவுளை அறிந்தவர் என்பதற்கும், உமது முன்னிலையை அடைந்தவர் இறைவனின் முன்னிலையை அடைந்தவர் என்பதற்கும், நான் சாட்சியளிக்கின்றேன். உம்மிலும் உமது அடையாளங்களிலும் நம்பிக்கை வைத்து, உமது ஆட்சியின் முன் தன்னைத் தாழ்வுப்படுத்திக் கொண்டு, உம்மைச் சந்திக்கும் பெருமை வழங்கப்பட்டு, உமது சித்தம் என்னும் நல்விருப்பத்தினை அடைந்து, உம்மை வலம் வந்து, உமது அரியாசனத்தின் முன் நிற்பவரின் ஆசி உயர்வானதாகும். உமக்கு எதிராக நடந்தவர்கள், உம்மை நிராகரித்தவர்கள், உமது அடையாளங்களை மறுத்தவர்கள், உமது ஆட்சியை எதிர்த்துப் பேசியவர்கள், உமக்கெதிராக எழுந்துள்ளவர்கள், உமது வதனத்தின்முன் செருக்கை வளரவிட்டவர்கள், உமது சான்றுகளைக் குறித்து வாதிட்டவர்கள், உமது ஆட்சியிலிருந்தும், உமது அரசிலிருந்தும் ஓட்டமெடுத்திட்ட இவர்கள், உமது கட்டளை என்னும் விரல்களினால், உமது புனித நிருபங்களில் பொறிக்கப்பட்டுள்ள சமய நம்பிக்கை அற்றோரது பெயர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுப், பெருந் துயருக்குள்ளாவர்.

என் கடவுளே, என் நேசரே, உமது கருணை எனும் வலது கரத்திலிருந்தும், உமது அன்புப் பரிவிலிருந்தும், உமது தயை என்னும் தெய்வீக மூச்சினை என்பால் மிதந்து வந்திடச் செய்வீராக, அதனால் என்னை, என்னிடமிருந்தும், இவ்வுலகிலிருந்தும் விடுவித்து, உமது முன்னிலை என்னும் அரசவையை அடையச் செய்வீராக. நீர் விரும்பியதைச் செய்திடும் சக்தி படைத்தவர் நீரே. நீர், உண்மையாகவே, அனைத்துப் பொருள்களையும் விட அதி மேன்மையானவராக இருந்து வந்திருக்கின்றீர்.

அவரின் அழகானவரே! இறைவனின் நினைவும், அவரின் புகழ்ச்சியும், கடவுளின் ஒளியும் அவரின் பிரகாசமும், உம் மீது இலயித்திடுமாக. படைப்பின் கண்கள் உம்மைப்போல் தீங்கிழைக்கப்பட்ட ஒருவரைக் கண்டதே இல்லை என்பதற்கு, நான் சாட்சியம் அளிக்கின்றேன். நீர், உமது வாழ்நாள் முழுவதும், கடுந் துன்பம் என்னும் கடலின் ஆழத்தில் அமிழ்ந்திருந்தீர். ஒரு வேளையில் சங்கிலியாலும், விலங்கினாலும் பிணைக்கப்பட்டுக் கிடந்தீர்; மற்றொரு வேளை, பகைவர்களின் வாளேந்திய அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருந்தீர். இருந்தும், அவையனைத்திற்கும் மாறாக, நீர், சர்வ ஞானியும், சர்வ விவேகியுமானவரினால் கட்டளை இடப்பட்டிருந்தவற்றை, எல்லா மனிதர்களையும் கடைப்பிடிக்குமாறு விதித்திட்டீர்.

நீர் அனுபவித்திட்டத் தீமைகளுக்காக எனது ஆவி பலியிடப்படுமாக; நீர் தாங்கிக் கொண்ட தொல்லைகளுக்காக எனது ஆன்மா பிணைமீட்பாகுமாக. உம் மூலமாகவும் உமது வதனத்தினின்று தோன்றும் ஒளியினால் பிரகாசமுற்ற முகங்களினாலும், உம் மீதுள்ள அன்பினால், தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடித்தவர்கள் மூலமாகவும், உமக்கும், உமது உயிரினங்களுக்குமிடையே தோன்றியுள்ள திரையினை விலக்கி, இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள எல்லா நன்மைகளையும் எனக்களிப்பீராக. நீர், உண்மையாகவே, எல்லாம் வல்லவர், அதி உயர்வானவர், ஒளிமயமானவர், என்றும் மன்னிப்பவர், அதி இரக்கமுடையவர்.

பிரபுவே, எனதாண்டவரே, உமது அதி உயர்வான பட்டங்கள் நிலைத்திருக்கும் வரையிலும், அதி நேர்த்தியான பண்புகள் நீடிக்கும் வரையிலும் இப்புனித விருட்சத்தினையும் அதன் இலைகளையும், அதன் கிளைகளையும் கொப்புகளையும், நடுத்தண்டுகளையும் தளிர்களையும், ஆசீர்வதிப்பீராக. ஆகவே, அதனைத் தாக்குவோரின் விஷமத்திலிருந்தும், கொடுங்கோன்மைப் படைகளிடமிருந்தும் அதனைப் பாதுகாப்பீராக. மெய்யாகவே, நீர், எல்லாம் வல்லவர், அதிசக்திவாய்ந்தவர். பிரபுவே, என் இறைவா, உம்மை அடைந்துள்ள உமது ஊழியர்களையும், பணிப்பெண்களையும், ஆசீர்வதிப்பீராக. நித்திய அருளினைக் கொண்டுள்ள நீர், உண்மையாகவே, வள்ளன்மையே உருவானவர். என்றும் மன்னிப்பவரும், அதி தாராள குணமுடையவருமான இறைவன், உம்மையன்றி வேறிலர்.

எல்லா மகிமைக்கும் மாட்சிமைக்கும் மேன்மைக்கும் மதிப்புக்கும் இறைமைக்கும் ஆட்சிக்கும் உயர்வுக்கும் அருளுக்கும் பேரச்சத்திற்கும் சக்திக்கும் மூலமாக விளங்கிடும் இறைவா, புகழனைத்தும் உமக்கே உரியதாகுக. நீர் விரும்பியவரை உமது அதிபெருங் கடலினை நெருங்கிடச் செய்வீர்; நீர் எவரை விரும்புகின்றீரோ அவருக்கு உமது அதி தொன்மையான நாமத்தினை அறிந்து ஏற்றுக் கொள்ளும் கௌரவத்தை அளிக்கின்றீர். விண்ணிலும் மண்ணிலுமுள்ள எவருமே உமது அரசாணையின் செயல்பாட்டினை எதிர்த்திட இயலாது. நித்திய காலத்திற்கும் படைப்பினம் முழுவதையுமே நீர் ஆண்டு வந்துள்ளீர்; இனி என்றும் எல்லாப் படைப்புப் பொருள்களின் மீதும் உமது ஆட்சியைத் தொடர்ந்து செலுத்தி வருவீர். சர்வ வல்லவரும் அதி மேன்மைமிக்கவரும் சர்வ சக்தி வாய்ந்தவரும் சர்வ விவேகியுமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.

பிரபுவே, உமது ஊழியர்களின் வதனங்களை ஒளிபெறச் செய்வீராக; அதனால் அவர்கள் உம்மைக் கண்ணுற இயலும்; அவர்களின் இதயங்களைத் தூய்மைப்படுத்துவீராக; அதனால் அவர்கள் உமது விண்ணுலகக் கடாட்சங்களின் அவையின்பால் திரும்பி உமது சொந்த மெய் நிலையின் அவதாரமும் உமது சாராம்சத்தின் பகலூற்றுமான அவரை ஏற்றுக் கொள்ளக் கூடும். மெய்யாகவே எல்லா உலகங்களின் பிரபுவும் நீரே; கட்டுப்படுத்தப்படாதவரும் சகலத்தையும் அடக்கவல்லவருமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.

பிரபுவே எனதாண்டவரே உந்தன் நாமம் போற்றப்படுமாக! உண்மையில் கண்ணுக்குப் புலப்படாத பொருள்களை அறிந்தவர் நீரே. சகலத்தையும் தழுவிடும் உமதரிவால் அளவிடக்கூடிய நன்மைகளை எங்களுக்கு விதித்திடுவீராக. இறையாண்மைமிக்கப் பிரபுவும் சர்வ வல்லவரும், அதி நேசரும் நீரே.

பிரபுவே, புகழெல்லாம் உமக்கே உரியதாகுக! நியமிக்கப்பட்ட நாளில் நாங்கள் உமது கிருபையை நாடி, எங்கள் முழு நம்பிக்கையை, எங்கள் பிரபுவாகிய உம்மில் செழுத்திடுவோம். கடவுளே, நீர் போற்றப்படுவீராக! நன்மையானவற்றையும் தகுந்தவற்றையும் எங்களுக்குத் தந்தருள்வீராக; அதனால் நாங்கள் உம்மையல்லாது மற்றனைத்தையும் கைவிடக் கூடும். மெய்யாகவே, எல்லா உலகங்களின் பிரபு நீரே ஆவீர்.

கடவுளே! உமது நாள்களில் பொறுமையோடு சகித்துக் கொள்வோருக்குச் சன்மானம் வழங்கிடுவீராக; உண்மை எனும் பாதையிலிருந்து விலகிடாது நடப்பதற்கு அவர்களின் இதயங்களைப் பலப்படுத்துவீராக. ஆகவே, பிரபுவே, உமது பேரின்பச் சொர்க்கத்தில் நுழைந்திட இயலச் செய்யவல்ல அழகிய பரிசுகளை அவர்களுக்குத் தந்தருள்வீராக. பிரபுவான ஆண்டவரே, நீர் மிகைப்படுத்தப் படுவீராக. உம்மீது நம்பிக்கை கொண்டோரின் இல்லங்கள் மீது உமது விண்ணுலக ஆசிகள் இறங்கிடச் செய்வீராக.

மெய்யாகவே தெய்வீக ஆசிகளைக் கீழ் அனுப்புவதில் நீர் ஈடிணையற்றவர். இறைவா, உமது விசுவாசமிக்க ஊழியர்களை வெற்றிபெறச் செய்யவல்ல வான்படைகளை அனுப்பிடுவீராக. நீர் விரும்பியவாறு, உமது கட்டளையின் சக்தி வாயிலாகப் படைப்புப் பொருள்களை நீர் உருவாக்குகின்றீர். மெய்யாகவே, நீரே அரசரும், படைப்பாளரும், சர்வ விவேகியும் ஆவீர்.

கூறுவீராக: மெய்யாகவே, அனைத்துப் பொருள்களின் படைப்பாளர் கடவுளே ஆவார். தாம் விரும்புகிற எவரொருவருக்கும் அவர் தாராளமாக வாழ்வாதாரங்களை வழங்கிடுகிறார். படைப்பாளரும், உயிருருக்கள் அனைத்தின் தோற்றுவாயானவரும், வடிவமைப்பாளரும், வல்லவரும், உருவாக்குபவரும், சர்வ விவேகியும் அவரே ஆவார். விண்ணுலகங்கள் மற்றும் மண்ணுலகம் ஆகிய அனைத்திலும், அவற்றுக்கு இடையேயுள்ள யாவற்றிலும், அவரே மிகச் சிறந்த பட்டப் பெயர்களுக்கு உரியவர் ஆவார். அனைவரும் அவரது கட்டளைக்கு அடிபணிவர்; விண்ணிலும் மண்ணிலும் வசிப்போர் அனைவரும் அவரது புகழைப் போற்றிப் பாடுவர்; மற்றும் அவரிடமே அனைவரும் திரும்பிச் சென்றிடுவர்.

நாள்தோறும் காலையிலும் மாலையிலும் நண்பகலிலும் கூற வேண்டியது.

பிரார்த்தனை செய்ய விரும்பும் ஒருவர் கைகளைக் கழுவட்டும்; அவ்வாறு செய்திடும் வேளையில் அவர் இவ்வாறு கூறட்டும்:

என் இறைவா, என் கரத்தினைப் பலப்படுத்துவீராக, அதனால் அது தன் முன்னால் உலகச் சேனைகளெல்லாம் சக்தியற்றுப் போய் விடுமளவு பற்றுறுதியுடன் உமது திருநூலினைக் கையிலெடுத்திடக் கூடும். பின்பு, அதனைத் தன்னுடையது அல்லாதவற்றில் தலை-யிடுவதிலிருந்து பாதுகாத்திடுவீராக. மெய்யாகவே, நீரே எல்லாம் வல்லவர், அதி சக்தியுடையவர்.

பிறகு அவர் முகத்தைக் கழுவிடும் பொழுது இவ்வாறு கூறட்டும்:

என் பிரபுவே, எனது முகத்தை உம்பால் திருப்பியுள்ளேன்! உமது வதனத்தின் பிரகாசத்தினால் அதனை ஒளி பெறச் செய்வீராக. பின்பு அதனை உம் ஒருவரைத் தவிர மற்றெவர்பாலும் திரும்பிடாதிருக்குமாறு பாதுகாப்பீராக.

பிறகு அவர் எழுந்து நின்று, கிப்லியின் திசையில் (வழிபாட்டிற்குரிய குறி, அதாவது பாஹ்ஜி, அக்காநகர்) முகத்தைத் திருப்பி இவ்வாறு கூறட்டும்:

தம்மைத் தவிர கடவுள் வேறு எவருமிலர் என்பதற்குக் கடவுளே சாட்சியமளிக்கின்றார். வெளிப்பாடு, படைப்பு என்னும் இராஜ்யங்கள் அவருடையவையே.

உண்மையாகவே, அவரே வெளிப்பாட்டின் பகலூற்றானவரையும் ஸைனாயில் உரையாடிய-வரையும், எவர் மூலமாக அதி உயரிய அடிவானம் பிரகாசிக்கச் செய்யப்பட்டு, கடந்து சென்றிட இயலா திருவிருட்சம் வாய் மலர்ந்ததோ, எவர் மூலமாக “அதோ சகலத்தையும் கொண்டுள்ளவர் வந்துவிட்டார்; உலகமும் சுவர்க்கமும் ஒளியும் இராஜ்யமும் மனிதர்களுக்கெல்லாம் பிரபுவானவரும், மேலுலகிலும் மண்ணுல-கிலுமுள்ள அரியாசனத்தைக் கொண்டுள்ள-வருமான இறைவனுடையதே” என்னும் அழைப்பு பிரகடனம் செய்யப்பட்டுள்ளதோ, அவரை, வெளிப்படுத்தியுள்ளார்.

பிறகு, அவர் குனிந்த பாங்கில் தனது கரங்களை முழங்கால் முட்டுவில் வைத்து இவ்வாறு கூறட்டும்:

எனது புகழ்ச்சிக்கும் என்னையன்றி மற்றவரின் புகழ்ச்சிக்கும், எனது வருணனைக்கும் விண்ணுலகிலும் மண்ணுலகிலுமுள்ள அனைவரின் வருணனைக்கும் மேல் உயர்வானவர் நீரே.

பிறகு நின்றவாறு அவர் கைகளை விரித்து, தனது உள்ளங் கைகளை முகத்தை நோக்கி திருப்பிய வண்ணம் இவ்வாறு கூறட்டும்:

என் இறைவா, மன்றாடும் விரல்களினால் உமது கருணை, கிருபை என்னும் அங்கியின் நுனியைப் பற்றிக் கொண்டுள்ளவனைக் கருணை காட்டுபவர்களிலேயே அதி கருணையாளரான நீர் நம்பிக்கை இழக்கச் செய்திடாதீர்.

பிறகு அவர் அமர்ந்து கொண்டு இவ்வாறு கூறட்டும்.

உமது ஏகத்துவத்திற்கும் ஒருமைத் தன்மைக்கும், நீரே கடவுள் என்பதற்கும், உம்மையன்றிக் கடவுள் வேறிலர் என்பதற்கும் நான் சாட்சியம் கூறுகின்றேன். நீர் மெய்யாகவே உமது சமயத்தை வெளிப்படுத்தியுள்ளீர். உமது ஒப்பந்தத்தைப் பூர்த்தி செய்துள்ளீர்; மண்ணுலகிலும் விண்ணுலகிலும் வாழும் அனைவருக்கும் உமது அருட் கதவினை அகலத் திறந்துள்ளீர். எவரை இவ்வுலகின் மாற்றங்களும் தற்செயல் நிகழ்வுகளும் உம்பால் திரும்புவதிலிருந்து தடுத்திட இயலவில்லையோ, எவர் உம்மிடம் உள்ளவற்றைப் பெற வேண்டுமென்ற எதிர்பார்ப்பின் காரணமாகத் தாம் கொண்டுள்ள அனைத்தையும் துறந்தனரோ அவ்வன்பர்களின் மீது அருளும் அமைதியும் வணக்கமும் ஒளியும் நிலைத்திடுமாக. நீர் உண்மையாகவே, என்றும் மன்னிப்பவர், சர்வ வள்ளன்மையாளர்.

(எவராவது, கூறுவதற்கு நீண்ட வாசகத்திற்குப் பதிலாக “ஆபத்தில் உதவுபவரும், தனித்து இயங்கவல்லவருமான அவரைத் தவிர கடவுள் வேறிலர் என்பதற்குத் தாமே சாட்சியம் ஆகின்றார்”, எனும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பாராகில் அது போதுமானது. அவ்வாறே அவர் அமர்ந்தவாறு கூறுவதற்கு, “உமது ஏகத்துவத்திற்கும் ஒருமைத் தன்மைக்கும் உம்மையல்லாது இறைவன் வேறிலர் என்பதற்கு நான் சாட்சியமளிக்கின்றேன்.” எனும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பாராகில் அது போதுமானது.)

(பஹாவுல்லாவின் பிரார்த்தனையும் தியானமும் என்ற நூலிலிருந்து,182)

என் இறைவா, உம் மீதுள்ள அன்பிற்காக உண்ணா நோன்பினைக் கடைப்பிடித்து, உமது அருவருப்புக்கு ஆளாகிடும் யாவற்றையும் தவிர்த்துள்ளோரின்பால், “நவ்ரூஸ்” என்ற விழாவினை விதித்துள்ளீர் என்பதற்காக நீர் போற்றப்படுவீராக. உமது அன்பெனும் நெருப்பும், உம்மால் கட்டளையிடப்பட்ட உண்ணா நோன்பின் பயனாகத் தோன்றிடும் வெப்பமும், அவர்களை உமது சமயத்தில் எழுச்சியுறச் செய்து, சதா உமது புகழ்ச்சியிலும் நினைவிலும் ஈடுபட்டிருக்கச் செய்திடுமாக.

என் பிரபுவே, உம்மால் உத்தரவிடப்பட்ட உண்ணா நோன்பு என்னும் அணிகலனைக் கொண்டு, அவர்களை நீர் அலங்கரித்திருப்பதனால், உமது அருளின் மூலமாகவும், வள்ளன்மைமிகு தயையின் மூலமாகவும், உமது “ஏற்றுக்கொள்ளல்” என்னும் அணிகலனைக் கொண்டு அவர்களை அலங்கரிப்பீராக. ஏனெனில், மனிதர்களின் செயல்கள் யாவும், உமது நல்விருப்பத்தைப் பொறுத்தும், உமது கட்டளைக்கு உட்பட்டுமே உள்ளன. உண்ணா நோன்பினைக் கைவிட்டுள்ள ஒருவரை, அதனைக் கடைப்பிடித்தவர் என நீர் கருதுவீராயின், அத்தகைய மனிதர் ஊழூழி காலம் முதல் உண்ணா நோன்பினைக் கடைப்பிடித்து வந்திருப்போரின் எண்ணிக்கையில் சேர்க்கப்படுவார். மேலும், உண்ணா நோன்பினைக் கடைப்பிடித்த ஒருவரை, அதனைக் கை-விட்டவரென நீர் தீர்ப்பு அளிப்பீராயின், அந் நபர், உமது வெளிப்பாடு என்னும் அங்கியினைப் புழுதியினால் கறைப்படுத்தி, இவ்வுயிரூற்றின் தெளிந்த நீருக்கப்பால் வெகுதூரம் விலக்கப்- பட்டோரின் எண்ணிக்கையில் சேர்க்கப்படுவார்.

உமது மூலமாகத்தான் “உமது வேலைப்-பாடுகளிலெல்லாம் நீர் போற்றத்தகுந்தவர் ஆவீர்” எனும் விருதுக்கொடி உயர்த்தப்பட்டுள்ளது, “உமது கட்டளைகளில் நீர் அடி பணியப்படுவீர்” எனும் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. என் இறைவா, உமது இந்த ஸ்தானத்தை உமது ஊழியர்களுக்குத் தெரியப்படுத்துவீராக; அதனால் அனைத்துப் பொருள்களின் உயர்வும், உமது கட்டளைக்கும் உமது திருவாக்கிற்கும் உட்பட்டதே என்பது அவர்களுக்கு உணர்த்தப்படுமாக; ஒவ்வொரு செயலின் மேன்மையும், உமது அனுமதியையும், உமது தீர்மானம் என்னும் நல்விருப்பத்தையும் பொறுத்தே உள்ளது என்பதையும், மனிதர்கள் செயல்களின் ஆட்சி அதிகாரங்கள் யாவும், உமது ஏற்பு, உமது கட்டளை ஆகியவற்றின் பிடியிலேயே அடங்கியுள்ளன என்பதையும், அவர்கள் அடையாளங் கண்டிடுவராக. இந் நாள்களில் உமது அழகினை நோக்குவதிலிருந்து, எதுவுமே அவர்களைத் தடுத்திட இயலாது என்பதனை அவர்கள்பால் அறிவித்திடுவீராக; இது குறித்து கிறிஸ்து உணர்வு ததும்பக் கூறுவதாவது,” ஆவியானவரைத் (இயேசுவைத்) தோற்றுவித்தவரே, ஆட்சி அனைத்தும் உம்முடையதே”; மேலும் உமது நண்பரான (முஹம்மது) உரத்துக் கூக்குரலிடுவதாவது: “அதி நேசிக்கப்படுபவரே, புகழெல்லாம் உமக்கே உரியதாகுக; ஏனெனில், தங்கள் அழகினை வெளிப்படுத்தி, எது உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டோரை அதி உயரிய நாமத்தின் வெளிப்பாட்டின் இருக்கையை அடையச் செய்திடுமோ, அதனை அவர்களுக்கு எழுதியருளியுள்ளீர். இவ்வதி உயரிய நாமத்தின் மூலமே, உம்மையன்றி மற்றெல்லாவற்றிலிருந்தும் பற்றறுத்து உம்மை வெளிப்படுத்துபவராகவும், உமது குணங்களின் அவதாரமாகவும் திகழும் அவரை நோக்கித் திரும்பிய உமது தேர்ந்தெடுக்கப்பட்டோரைத் தவிர, மற்றெல்லா மக்களும் அழுது புலம்பினர்.

என் பிரபுவே, உமது விருட்சத்தின் கிளையும், உமது தோழர்களாகிய இவர்களும், உம்மை மகிழ்விக்கும் பேரார்வத்தினால், உமது அரசவையின் சூழிடங்களுக்குள் உண்ணா நோன்பினைக் கடைப்பிடித்தபின், இன்று, அதனை முடித்துக் கொண்டுள்ளனர். அவருக்கும், அவர்களுக்கும், கடந்த காலத்தில் உமது முன்னிலையை அடைந்தோருக்கும், உமது திருநூலில் நீர் விதித்துள்ளவை அனைத்தையும் கிடைக்கச் செய்திடுவீராக. ஆகவே, இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு நன்மையளிக்கக் கூடியவற்றினை, அவர்களுக்கு வழங்கிடுவீராக.

உண்மையாகவே, நீரே சர்வ ஞானி, சர்வ விவேகி.

பிரபுவே எனதாண்டவரே, உந்தன் நாமம் புகழப்படுவதாக! எல்லாப் படைப்புப் பொருள்களையும் சூழ்ந்துள்ள உமது சக்தியினாலும், படைப்பு முழுவதையும் விஞ்சியுள்ள உமது அரசாட்சியினாலும், உமது விவேகத்தினுள் மறைந்திருந்த எதனைக் கொண்டு, உமது விண்ணையும் மண்ணையும் படைத்தீரோ, அந்த உமது திருவாக்கினாலும், உந்தன் மீதான அன்பிலும், உமது விருப்பத்திற்கு அடிப்பணிவதிலும் எங்களைப் பற்றுறுதியுடன் இருந்திடவும், உந்தன் வதனத்தின்பால் எங்கள் பார்வையைப் பதித்திடவும், உந்தன் புகழைப்பாடிடவும், எங்களை இயலச் செய்யுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன். ஆதலால், என் கடவுளே, உமது உயிரினங்களின் மத்தியில் உந்தன் அடையாளங்களை எங்கும் பரவச் செய்திடவும், உந்தன் இராஜ்யத்தில் உமது சமயத்தைப் பாதுகாப்பதற்கும் எங்களுக்குச் சக்தியளிப்பீராக. உந்தன் உயிரினங்கள் உம்மைப் பற்றிக் கூறுவதிலிருந்து நீர் என்றென்றும் சுதந்திரமாக இருந்து வந்துள்ளீர்; என்றென்றும் அவ்வாறே தொடர்ந்து இருந்தும் வருவீர்.

நான் எனது முழு நம்பிக்கையை உந்தன் மீதே வைத்துள்ளேன்; உந்தன்பால் எனது முகத்தைத் திருப்பியுள்ளேன்; உமது அன்பு ஆதரவெனும் கயிற்றினை இறுகப் பற்றிக் கொண்டுள்ளேன், மற்றும் உமது கருணை எனும் நிழலை நோக்கி, நான் விரைந்துள்ளேன். என் கடவுளே, ஏமாற்றம் அடைந்தவனாக உமது வாசலிலிருந்து என்னைத் துரத்தி விடாதீர்; மற்றும் உந்தன் கிருபையை எனக்குத் தரமறுத்திடாதீர்; ஏனெனில், உம்மை மட்டுமே நான் நாடுகிறேன். என்றும் மன்னிப்பவரும், அதிவள்ளன்மையாளரும் உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.

உம்மை அறிந்தோருக்கு இறையன்பரானவரே, புகழ் உமக்கே உரியதாகுக!

அதி மேலான, கடவுளின் பெயரால்! பிரபுவே, சர்வ சக்திமிக்கக் கடவுளே, நீர் போற்றிப் புகழப்படுவீராக; எவரது விவேகத்தின் முன், விவேகிகள் தம் திறனையிழந்தும், தவறியும் விடுகின்றனரோ; எவரது அறிவின் முன் கற்றோர் அவர்களின் அறியாமையை ஒப்புக்-கொள்கின்றனரோ; எவரது வலிமையின் முன் பலம்படைத்தோர் வலுவற்று நிற்கின்றனரோ; எவரது செல்வத்தின் முன் செல்வந்தர் அவர்களின் வறிய நிலையை ஒப்புக்கொள்கின்றனரோ; எவரது ஒளியின் முன், ஞானம் பெற்றோர் இருளில் காணாமல் போயுள்ளனரோ, இழந்துள்ளனரோ; எவரது அறிவென்னும் புனிதாஸ்தலத்தை நோக்கி எல்லாப் புரிந்துணர்வின் சாரமும் திரும்பி- யுள்ளனவோ; மற்றும் எவரது முன்னிலையின் சரணாலயத்தைச் சுற்றி மனுக்குலத்தின் எல்லா ஆன்மாக்களும் வலம் வந்துள்ளனவோ, அவர் நீரே ஆவீர்.

விவேகிகளின் விவேகமும், கற்றோரின் கற்றலும் புரிந்துகொள்ள தவறிய உமது சாராம்சத்தைப் பற்றி நான் எவ்வாறு பாடவோ, விவரிக்கவோ இயலும்; ஏனெனில், எந்த மனிதனும் தான் புரிந்துகொள்ளாத ஒன்றைப் பாடவும் இயலாது, அன்றியும் தான் அடைந்திட இயலாத ஒன்றைப் பற்றி விவரிக்கவும் இயலாது. ஆனால், நீரோ நித்திய காலம் முதல், அணுகமுடியாதவராகவும், தேடிட முடியாதவராகவும் இருந்துள்ளீர். உமது ஒளி எனும் சுவர்க்கங்களுக்கு நான் உயர்ந்திடவும், உமது அறிவெனும் இராஜ்யங்களில் நான் உயரப் பறந்திடவும் சக்தியற்று இருந்தபோதிலும், நான் உமது அடையாளங்களைக் குறித்தும், உமது ஒளிமிக்கக் கைவண்ணங்களைக் குறித்தும் விவரித்திட இயலும்.

உந்தன் பேரொளியினால்! எல்லா இதயங்களின் பேரன்பரே, உமக்காக ஏங்கிடும் வேதனையைத் தணியச் செய்யக்கூடிய தன்னந்தனியானவரே! எதன் மூலமும், எதனைக் கொண்டும் நீர் உம்மை வெளிப்படுத்தியுள்ளீரோ, அந்த அடையாளங்களுள் மிக அற்பமானவற்றைப் புகழ்வதற்கு விண்ணிலும் மண்ணிலும் வசிப்போர் அனைவரும் ஒன்றுசேர்ந்த போதிலும், அவ்வாறு செய்வதில் அவர்கள் தவறிடுவர்; உமது சின்னங்கள் அனைத்தின் படைப்பாளரான உமது புனிதச் சொல்லினை அவர்கள் எங்ஙனம் போற்றிட இயலும்.

நீர் ஒருவரே என்றும், உம்மைத் தவிர வேறு கடவுள் இலர் என்றும், நித்தியக் காலம் முதல் எல்லா சரியிணையானோருக்கும், ஒப்பானோருக்கும் மேலாக உயர்ந்தும், நித்திய காலமும் அவ்வாறே நிலைத்திருக்க விரும்புபவர் என எல்லாப் பொருள்களும் சாட்சியம் பகர்ந்துள்ள உமக்கே எல்லாப் புகழும், பெருமையும் சேரட்டுமாக. மன்னர்கள் எல்லாரும் உமது ஊழியர்கள் ஆவர்; உருவமும், அருவமுமான அனைத்து ஜீவிகளும் உம்முன் ஒன்றுமில்லாமையாகும். கிருபை- யாளரும், சக்திமிக்கவரும், அதிவுயர்வான-வரான உம்மைத் தவிர, வேறு கடவுள் இலர்.

பிரபுவே, எனதாண்டவரே, என் மனவேதனையில், என் சுவர்க்கமே! எனது துயரங்களில் என் கவசமும் அடைக்கலமும் ஆனவரே! தேவையான வேளையில் எனது தஞ்சமும் புகலிடமுமானவரே. எனது தனிமையில் என் துணைவரே! எனது வேதனைகளில் என் ஆறுதலே, எனது ஏகாந்தத்தில் என் அன்பான தோழரே! என் கவலைகளின் வேதனைகளை நீக்குபவரே, பாவங்களை மன்னிப்பவரே!

தெய்வீக ஒருமைப்பாடெனும் இக்கால வட்டத்தில், உமது கட்டளைக்கு மாறாக நடந்திடும் அனைத்திலிருந்தும் என்னைக் காத்தருளுமாறும், கறையற்ற, மாசுபடியா நிலையில் நான் உமது அருள் என்னும் விருட்சத்தின் நிழலினைத் தேடுவதிலிருந்து என்னைத் தடுத்திடும் எல்லா அசுத்தங்களிலிருந்தும், என்னைத் தூய்மைப்- படுத்துமாறும், நான், மிகு ஆர்வத்துடன், என் உள்ளத்தினாலும், மனத்தினாலும், நாவினாலும், உம்மைக் கெஞ்சியவண்ணம் உந்தன்பால் முழுமையாகத் திரும்புகின்றேன்.

பிரபுவே, பலவீனர்களின் மீது கருணை காட்டுவீராக, நோயுற்றோரைக் குணப்படுத்துவீராக, கடுந் தாகத்தினைத் தணிப்பீராக. உமது அன்பெனும் நெருப்புக் கனன்றிடும் நெஞ்சத்தினை மகிழ்வுறச் செய்து அதனை உமது தெய்வீக அன்பு, உந்துதல் என்னும் சுடரினால் ஒளிரச் செய்வீராக.

தெய்வீக ஒற்றுமை எனும் கோயில்களுக்குப் புனிதம் எனும் ஆடை அணிவித்து, என் சிரசுக்கு உமது தயை எனும் மகுடத்தைச் சூட்டுவீராக.

உமது வள்ளன்மையெனும் கோளத்தின் பிரகாசத் தினைக் கொண்டு என் முகத்தினைப் பிரகாசிக்கச் செய்து, உமது திருவாயிலில் ஊழியம் செய்திட எனக்குக் கிருபை கூர்ந்து உதவிடுவீராக.

என் இதயத்தை உமது உயிரினங்களின்பாலான அன்பினால் நிரம்பி வழிந்தோடச் செய்து, நான், உமது கிருபையின் சின்னமாகிடவும், உந்தன்பால் பக்திகொண்டிடவும், என்னையே மறந்த நிலையில், உம்மை நினைவு கூர்ந்து வழிபட்ட வண்ணம், ஆனாலும், உம்மைச் சார்ந்தவற்றின்பால் என்றும் விழிப்புணர்வுடனும் இருந்திட அருள்வீராக.

கடவுளே, என் கடவுளே! உமது மன்னிப்பு, கிருபை, என்னும் மென்காற்று என்னை வந்தடைவதைத் தடுத்திடாதீர், உமது உதவி, தயை என்னும் கிணற்றூற்றுகளை எனக்குக் கிட்டாது செய்திடாதீர்.

உமது பாதுகாத்திடும் சிறகுகள் நிழலின் கீழ் என்னை இணைந்திட விடுவீராக; சகலத்தையும் காத்திடும் உமது கண் பார்வையினை என் மீது விழச் செய்வீராக.

உமது மக்கள் மத்தியில் உமது திருநாமத்தினைப் போற்றிப் புகழ்ந்திட என் நாவினைத் தளர்த்திடுவீராக; அதனால், மாபெரும் சபைகளில் என் குரல் எழுப்பப்பட்டு, என் உதடுகளிலிருந்து உம் புகழ் வெள்ளம் வழிந்திடக்கூடுமாக.

உண்மையாகவே, கிருபைமிக்கவரும், மேன்மை-மிக்கவரும், வலிமைமிக்கவரும், சக்திமிக்கவரும் நீரே.

பிரபுவே எனதாண்டவரே, நீர் மகிமைப்படுத்தப்-படுவீராக! உமது நாள்களில் என்னை உருவாக்கி, உமது அன்பையும் அறிவையும் என்னுள் உட்புகுத்தியமைக்காக உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். உம்முடன் அணுக்கமாக இருக்கும் உமது ஊழியர்களின் உள்ளங்களெனும் பொக்கிஷங்களிலிருந்து, உமது விவேகம், சொற்கள் ஆகிய நல்முத்துகள் வெளிக்கொணரப்பட்ட உமது நாமத்தின் பேராலும், இரக்கமுடையவர் எனும் உமது நாமமெனும் பகல் நட்சத்திரத்தின் மூலமாக, உமது சுவர்க்கம், உமது பூமி ஆகிய அனைத்தின் மீதும் அதன் பிரகாசத்தைப் பொழிந்திட்ட அந்நாமத்தினாலும், உமது கிருபை, கொடை ஆகியவற்றின் பேராலும், உமது அற்புதமான-வையும், மறைவாய் உள்ளவையும் அருட்கொடை-களைத் தந்தருளுமாறு நான் உம்மிடம் இறைஞ்சுகின்றேன்.

என் கடவுளே, உமது சொந்த நாள்களோடு நீர் இணைத்துள்ள என் வாழ்வின் ஆரம்ப நாள்கள் இவையே. நீர் என் மீது அத்துணைப் பெரும் மதிப்பை இப்போது பொழிந்துள்ள காரணத்தால், உமது தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு நீர் விதித்தருளியவற்றை எனக்கும் தரமறுத்து விடாதீர்.

என் கடவுளே, உமது அன்பெனும் நிலத்தில் விதைத்தும், உமது கொடை எனும் கரத்தினால் துளிர்விடச் செய்துமுள்ள ஒரு சிறு வித்துதான் நான். எனவே, இவ்வித்து, அதன் மன ஆழத்தில், உமது கருணை எனும் நீர்களுக்காகவும், உமது கிருபை எனும் உயிரூற்றுக்காகவும் ஏங்குகிறது. உமதன்புக் கருணை எனும் சுவர்க்கத்திலிருந்து, உமது நிழலின் கீழும், உமது அரசவையின் எல்லைகளுக்குள்ளும் அது செழுமையாகிட உதவக்கூடியவற்றை, அதன் மீது பொழிந்திடுவீராக. உமது நிறைவான ஓடையிலிருந்தும், உந்தன் உயிர் நீர் எனும் ஊற்றுக்களிலிருந்தும், உம்மை கண்டுணர்ந்த அனைவரின் இதயங்களிலும் நீர் பாய்ச்சுபவர் நீரே ஆவீர்.

உலகங்களுக்கெல்லாம் பிரபுவான இறைவன் போற்றப்படுவாராக.

உபரிநாள்கள் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் இறுதி நாள்களில் தொடங்கி மார்ச் மாதம் ஆரம்ப நாள்கள் வரை நீடிக்கும். உண்ணா நோன்பினை மேற்கொள்வதற்கு ஒருவர் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் நாள்களாகவும் உபசரித்தல், தர்ம காரியங்கள் செய்தல், பரிசுகள் வழங்குதல் போன்றவற்றிற்கு உகந்த நாள்களாகவும் இவை இருக்க வேண்டும்.

என் கடவுளே, எந்தன் தீச் சுடரே, எந்தன் ஒளியே! நாமங்களுக்கெல்லாம் மன்னரே, நீர், அய்யாம்-இ-ஹா என்று உமது திருநூலில் பெயரிட்டுள்ள உபரி நாள்கள் ஆரம்பமாகிவிட்டன, என் பிரபுவே, உமது படைப்பின் இராஜ்யத்திலுள்ள யாவரையும் கடைப்பிடிக்குமாறு, நீர், உமது அதி மேன்மைப்படுத்தப்பட்ட எழுதுகோலைக் கொண்டு கட்டளையிட்டுள்ள உண்ணா நோன்பு நெருங்கிக் கொண்டிருக்கின்றது. என் பிரபுவே, இந் நாள்களின் பெயராலும், உமது கட்டளைகள் என்னும் கயிற்றினைப் பற்றி, உமது நீதி என்னும் வாசகங்களை அனுசரித்திடுவோர் அனைவரின் பெயராலும், உமது அரசவை என்னும் வட்டாரத்திற்குள் ஒவ்வோர் ஆன்மாவிற்கும் ஓர் இடத்தை நியமித்து, உமது வதனத்தினின்று வெளிப்பட்டிடும் ஒளியின் பிரகாசங்கள் என்னும் ஆசனத்தின் அருகே, அவர்களுக்கு, ஓர் இருக்கையும் வழங்கி அருளுமாறு, நான் உம்மை மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றேன்.

என் பிரபுவே, உமது திருநூலில் நீர் வழங்கிய வற்றிலிருந்து, எவ்விதத் தூய்மையற்ற ஆசைகளும், தங்களைத் தடைசெய்ய விட்டிராதவர்கள் இவர்களே. அவர்கள், உமது சயத்தின்முன் தலை வணங்கியுள்ளனர்; உம்மிலிருந்தே உதிக்கவல்ல மனவுறுதியுடன், உமது திருநூலை ஏற்றனர், அதனுள், நீர், அவர்கள்பால் ஆணையிட்டுள்ளவற்றைக் கடைப்பிடித்து உம்மால் விதிக்கப்பட்டுள்ளவற்றையே தேர்ந்தெடுத்துப் பின்பற்ற முடிவுசெய்துள்ளனர்.

என் பிரபுவே, எங்ஙனம் இவர்கள், உமது திருநூலில் நீர் வெளியிட்டுள்ளவற்றினை அங்கீகரித்தும், ஒப்புக்கொண்டும் உள்ளனர் என்பதைப் பார்க்கின்றீர். என் பிரபுவே, உமது அருள்மிகு கரங்களிலிருந்து அவர்களுக்கு, உமது நித்தியம் என்னும் நீரினைப் பருக வழங்குவீராக. ஆகவே, நீர், உமது முன்னிலை என்னும் சமுத்திரத்தில் தன்னை மூழ்க வைத்துக் கொண்டுள்ளவருக்கெனவும், உமது சந்திப்பு என்னும் நனிசிறந்த திராட்சை ரசத்தினை அடைந்துள்ளவருக்கெனவும், விதிக்கப்பட்டுள்ள கைம் மாறினை அவர்களுக்கும் எழுதி வைப்பீராக.

மன்னருக்கெல்லாம் மன்னரே, நசுக்கப்பட்டோருக்கு இரங்குபவரே, இம்மையிலும் மறுமையிலும் உள்ள நன்மைகள் அனைத்தையும் அவர்களுக்கு அளிக்குமாறு உம்மை வேண்டிக்கொள்கிறேன். மேலும், உமது படைப்பினங்கள் எதுவுமே கண்டிராதவற்றினை, அவர்களுக்கென எழுதி வைப்பதோடு, உம்மைச் சுற்றி வலம் வந்துள்ளோரையும், உமது உலகங்களின் ஒவ்வோர் உலகிலும், உமது அரியாசனத்தைச் சுற்றி நடமாடுபவர்களின் எண்ணிக்கையில் இவர்களையும் சேர்த்துக் கொள்வீராக.

உண்மையாகவே, எல்லாம் வல்லவரும், சர்வ ஞானியும், அனைத்தும் அறிவிக்கப்பட்டவரும் நீரே ஆவீர்.

என் கடவுளே, உந்தன் நாட்டில் நீர் மூட்டியுள்ள தீ யாதென்று நான் அறியேன். அதன் பேரொளியை என்றுமே பூமியால் மறைத்திடவே இயலாது; அதன் தீச்சுடரை நீரினாலும் அணைத்திட இயலாது. உலக மக்கள் அனைவரும் அதன் ஆற்றலை எதிர்த்திட சக்தியற்று உள்ளனர். அதன் அருகில் நெருங்கி, அதன் கர்ஜனையைச் செவிமடுத்தோனின் புனிதத்தன்மை மகத்தானதாகும்.

என் கடவுளே, உந்தன் பலப்படுத்தும் கிருபையின் வாயிலாகச், சிலரை, அதனை நெருங்கிச் செல்ல நீர் இயலச் செய்துள்ளீர்; அதே வேளையில், உமது நாள்களில் அவர்களது கரங்கள் ஆற்றிய காரியங்களின் காரணமாக மற்றவர்களை அதனை நெருங்குவதிலிருந்து நீர் தடுத்து வைத்துள்ளீர். எவரொருவர் அதனை நோக்கி விரைந்து சென்று, அதனை அடைந்துள்ளாரோ, அவர் உமது அழகினைக் கண்ணுற வேண்டும் எனும் ஆவலின் காரணமாக, உந்தன் பாதையில் தன் உயிரை அர்ப்பணித்தும், உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் பற்றறுத்து, உம்மிடமே விண்ணுயர்ந்துள்ளார்.

என் பிரபுவே, படைப்புலகில் சுடர்வீசி சீறிடும் இந்தத் தீயின் பெயரால், உந்தன் மாட்சிமை எனும் அரியாசனத்தின் முன் தோன்றுவதிலிருந்து என்னைத் தடுத்தும், உமது வாசலின் கதவருகில் நிற்பதிலிருந்து என்னைத் தடுத்திடும் திரைகளைக் கிழித்தெறிந்திடும்படி நான் உம்மை மன்றாடுகின்றேன்.

என் பிரபுவே, உமது திருநூலில் நீர் கீழே அனுப்பியுள்ள ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் எனக்காக விதித்தருள்வீராக; மேலும் உமது கருணை எனும் பாதுகாப்பிலிருந்து, என்னை வெகுதூரம் விலகி நிற்காதிருக்கச் செய்வீராக.

நீர் விரும்பியவாறு செய்வதற்குச் சக்திமிக்கவர் நீரே ஆவீர். மெய்யாகவே, நீரே சர்வ சக்திமிக்கவர், அதி தாராளமானவர்.

எவரது அச்சுறுத்தும் மாட்சிமை முன் யாவும் நடுங்கி நிற்கின்றனவோ, எவரது பிடிக்குள் மனிதர்கள் அனைவரின் காரியங்களும் அடங்கியுள்ளனவோ, எவரது கிருபை, கருணை ஆகியவற்றின்பால், உயிரினங்கள் அனைத்தின் வதனங்களும் நோக்கியவாறு உள்ளனவோ, இவையனைத்துக்கும் உரியவர் நீரே! நாமங்கள் எனும் இராஜ்யத்தினுள் உள்ள அனைத்து நாமங்களின் ஆற்றலாகிட நீர் விதித்திட்ட உமது திருநாமத்தினால், உமது நாமங்கள் எனும் இராஜ்யத்தை நடுங்கச் செய்திட்ட இந்த திருவெளிப்பாட்டில், உம்மிடமிருந்து திரும்பியோடியோரிடமிருந்து, உமது அதி மாண்புமிக்க, அதி உயர்வுமிக்க தான் எனும் தன்மையின் உண்மையை மறுத்திட்டோரின் முணுமுணுப்புக்களிலிருந்தும் எங்களைப் பாதுகாக்கும்படி நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் பிரபுவே, நான் உமது பணிப்பெண்களுள் ஒருத்தியாவேன்! உமது கருணைமிக்க அருட்கொடையின் சரணாலயத்தை நோக்கியும், உமது ஒளியினால் போற்றப்படும் திருக்கூடாரத்தை நோக்கியும் நான் என் முகத்தைத் திருப்பியுள்ளேன். உம்மைச் சார்ந்திராத அனைத்திலிருந்தும் என்னை தூய்மைப்படுத்துவீராக; உம்மை நேசிக்கவும், உமது விருப்பத்தை நிறைவேற்றவும் என்னைப் பலப்படுத்துவீராக; அதனால் உமது அழகினை நினைப்பதிலேயே நான் என்னை மகிழ்வுபெறச் செய்தும், உமது உயிரினங்கள் அனைத்தின் மீதுள்ள எல்லாப் பற்றுகளையும் துறந்திடக் கூடுமாக; மேலும், ஒவ்வொரு கணமும் “உலகங்களுக்கெல்லாம் பிரபுவான இறைவன், மேன்மைப்படுத்தப்படுவாராக!” என, ஒவ்வொரு கணமும், பிரகடனம் செய்திடக் கூடுமாக.

என் பிரபுவே, உமது அழகு எனது உணவாகிடவும், உமது முன்னிலையின் ஒளி எனது பானமாகிடவும், உமது இன்பம் எனது நம்பிக்கையாகிடவும், உம்மைப் போற்றுவதே எனது வேலையாகிடவும், உமது நினைவே எனது தோழனாகவும், உமது இறையாண்மையே எனது உதவியாகவும், உமது வாசஸ்தலமே எனது இருப்பிடமாகவும், உம்மிடமிருந்து ஒரு திரையைப்போன்று மறைக்கப்பட்டோரின் வரம்புகளுக்கு மேலாகத் நீர் உயர்த்தியுள்ள இருக்கையையே எனது இல்லமாக ஆக்கிடுவீராக.

உண்மையாகவே, நீரே சக்தி, வலிமை, பேரொளி ஆகிய இறைவனாவீர்.

என் இறைவா, உமது நித்தியம் என்னும் இனிய நறுமணமிகு நீரோடையிலிருந்து என்னைப் பருகச் செய்வீராக. என் நம்பிக்கையே, உமது மெய்நிலை என்னும் விருட்சத்தின் கனிகளைச் சுவைத்திட எனக்கு உதவுவீராக; எந்தன் பேரொளியே! உந்தன் அன்பு என்னும் தெளிவான நீரூற்றிலிருந்து என்னை அருந்திடச் செய்வீராக. எந்தன் பிரகாசமே! உமது நித்திய அருள்பாலிப்பு என்னும் நிழலின்கீழ் என்னை வசித்திடச் செய்வீராக. எந்தன் நேசரே! உமது அருகாமை என்னும் பசும்புல்வெளிகளில், உமது முன்னிலையில், என்னை நடமாடச் செய்வீராக. எனதாவலே! உமது கருணை என்னும் அரியாசனத்தின் வலப்பக்கத்தில் என்னை அமரச் செய்வீராக. எந்தன் குறிக்கோளே! உமது மணங்கமழ் மகிழ்ச்சி என்னும் இளங்காற்றுகளில் ஒன்றினை என்மீது வீசிடச் செய்வீராக. எந்தன் வழிப்பாட்டிற்குரியவரே! உமது மெய்ம்மை என்னும் சுவர்க்கத்தின் உச்சங்களினுள் என்னைப் பிரவேசிக்கச் செய்வீராக. பிரகாசமிக்கவரே! என்னை உமது ஒருமைத் தன்மை என்னும் புறாவின் கீதங்களைச் செவிமடுக்கச் செய்வீராக. எந்தன் அருளாளரே! உமது ஆற்றல், வல்லமை என்னும் உயிர்ப்புச் சக்தியின் மூலம் என்னைத் துரிதப்படுத்துவீராக. எந்தன் ஆதரவாளரே! உமது அன்பு என்னும் உயிர்ப்புச் சக்தியினில் என்னை உறுதியுடன் இருக்கச் செய்வீராக. என்னை ஆக்கியோனே! உமது நல்விருப்பம் என்னும் பாதையில் என் காலடிகளை வலுப்படுத்துவீராக. என்பால் கருணையுடையவரே! உந்தன் இறவாமை என்னும் பூங்காவினில், உமது வதனத்தின் முன், என்னை என்றென்றும் உறைந்திடச் செய்வீராக. என்னை உடைமையாகக் கொண்டுள்ளவரே, உமது மகிமை என்னும் இருக்கையின் மீது என்னை நிலைபெறச் செய்வீராக. என்னைத் துரிதப்படுத்துபவரே! உமது அன்புப் பரிவு என்னும் விண்ணுலகின்பால் என்னை உயர்த்துவீராக; என்னை ஈர்ப்பவரே! உமது வழிக்காட்டல் என்னும் பகல் நட்சத்திரத்தின்பால் என்னை வழிநடத்துவீராக! எனது மூலமுதலும் அதிவுயர் விருப்பமும் ஆனவரே! உமது கண்களுக்குப்-புலனாகா ஆவியின் வெளிப்பாடுகளுக்கு முன்னால் என்னைப் பிரசன்னமாகிட அழைப்பாணை விடுப்பீராக. என் இறைவனானவரே, நீர் வெளிப்படுத்தவிருக்கும் உமது அழகு என்னும் நறுமணத்தின் சாரத்தின்பால் என்னைத் திரும்பி வந்திடச் செய்வீராக!

தான் விரும்பியதைச் செய்யும் ஆற்றலுடையவர் நீரே ஆவீர். மெய்யாகவே, நீரே அதி மேன்மைமிக்கவர், ஒளிமயமானவர், அதி உயர்வானவர்.

பிரபுவே எனதாண்டவரே, ஒளி உமக்கே உரியதாகுக! என்றும் நிலையான உமது அரசாட்சியின் சக்தி வாயிலாக, நீர் உயர்வுபெறச் செய்துள்ளவரைத் தாழ்வுறச் செய்திடாதீர்; உமது நித்தியம் எனும் கூடாரத்திற்குள் நுழைந்திடச் செய்தவரை உம்மிடமிருந்து நீர் வெகுதூரம் விலகிடச் செய்திடாதீர். என் கடவுளே, உமது ஆதிக்கத்தைக் கொண்டு மேலுயர்ந்து நிற்கச் செய்திட்டவரை, நீர் துரத்திவிடப் போகின்றீரா? என் ஆவலானவரே, நீரே ஒரு புகலிடமாக இருந்திட்ட ஒருவரை, உம்மிடமிருந்து புறக்கணிக்கப் போகின்றீரா? நீர் மேன்மையுறச் செய்தவரை, நீரே தரமிழக்கச் செய்திட இயலுமா, அல்லது உம்மை நினைவுகூர்ந்திட நீர் இயலச் செய்தவரை உம்மால் மறந்திட இயலுமா?

மகிமை பொருந்தியவர், அளவற்ற மகிமை பொருந்தியவர் நீரே! நித்திய காலமும் படைப்பு முழுவதன் அரசரும், அதன் முதன்மை இயக்குபவருமானவர் நீரே ஆவீர்; நித்திய காலமும் எல்லாப் படைப்புப் பொருள்களின் பிரபுவாகவும், அவற்றின் ஆணையாளராகவும் நீரே நிலைத்திருப்பீர். என் கடவுளே, மகிமை பொருந்தியவர் நீரே ஆவீர்! உமது ஊழியர்களிடம் கருணைக் காட்டுவதை நீர் நிறுத்திக்கொண்டால், அவர்களிடம் கருணைக் காட்டுபவர்தான் யார்; உமது அன்புக்குரியவர்களை நீர் ஆதரிக்க மறுத்துவிட்டால், அவர்களுக்கு ஆதரவளிக்கக் கூடியவர்தான் யார்?

மகிமை பொருந்தியவர், அளவற்ற மகிமைப் பொருந்தியவர் நீரே! உமது உண்மைநிலையில் நீர் ஆராதனைக்குரியவர்; மெய்யாகவே, உம்மைத்தான் நாங்கள் அனைவரும் வழிபடுகிறோம்; உமது நீதியில் வெளிப்படையானவர் நீரே ஆவீர், உம்மிடமே, மெய்யாகவே, நாங்கள் அனைவரும் சாட்சியம் பகர்கின்றோம். மெய்யாகவே, உமது அருள்பாலிப்பில் அன்புக்குரியவர் நீரே ஆவீர். ஆபத்தில் உதவுபவரும், சுய ஜீவியானவரும் உம்மையன்றி வேறு கடவுள் இலர்.

பிரபுவே எனதாண்டவரே, நீர் போற்றப்படுவீராக! நீர், உமது ஊழியர்களைத் தூண்டியும், உமது நகரங்களை எழுப்பியுமுள்ள உமது அதி பெரும் நாமத்தின் பேராலும், உமது மிகச் சிறந்த பட்டங்களாலும் பன்மடங்கான அருட்-கொடைகளை நோக்கித் உமது மக்களைத் திரும்பச் செய்திடவும், உமது விவேகம் எனும் திருக்கூடாரத்தை நோக்கி அவர்கள் தங்களின் வதனங்களைத் திருப்பிடச் செய்யுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன். விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவருக்கும் மேலும் நாமங்களுக்கெல்லாம் அரசன் என நீர் விதித்திட்ட நாமமாகிய, உமது நிழல்தரும் நாமத்தின் பாதுகாப்பின் கீழ் உறைந்து கிடக்கும் சொர்க்கத்தின்பால் எல்லாத் திசைகளிலிருந்தும் தாக்கப்பட்டுள்ள ஆன்மாக்களின் பார்வையைத் திருப்பிடாது தடுத்திட்ட நோய்களைக் குணப்படுத்துவீராக. உமது விரும்பியதைச் செய்திடுவதற்குச் சக்தி படைத்தவர் நீரே ஆவீர். எல்லா நாமங்களின் சாம்ராஜ்யமும் உமது பிடிகளிலேயே உள்ளன. வலிமைமிக்கவரும், விவேகியுமான உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.

என் பிரபுவே நான் ஓர் அற்ப உயிரினமாவேன்; நான் உமது செல்வங்களின் விளிம்பினைப் பற்றிக்கொண்டுள்ளேன். நான் கடும் நோய்க்கு ஆளாகியுள்ளேன்; உமது குணப்படுத்துதல் எனும் கயிற்றை இறுகப் பற்றிக்கொண்டுள்ளேன். என்னைச் சூழ்ந்துள்ள நோய்களிலிருந்து என்னை விடுவிப்பீராக; உமது கிருபை, கருணை ஆகியவற்றின் நீர்களைக் கொண்டு என்னை நன்றாகக் கழுவிடுவீராக; உமது மன்னிப்பு, அருட்கொடை ஆகியவற்றின் வாயிலாக, ஆரோக்கியம் எனும் வஸ்திரத்தைக் கொண்டு என்னை அணிவிப்பீராக. ஆதலால், என் கண்களை உம்மீது பதியச் செய்து, உம்மைத் தவிர மற்றெல்லாவற்றின் மீதுள்ள பற்றுகள் அனைத்தையும் என்னிடமிருந்து அகற்றிடுவீராக. நீர் ஆசைப்படுவதைச் செய்திடவும், நீர் விரும்பியதை நிறைவேற்றிடவும் எனக்கு உதவிடுவீராக.

மெய்யாகவே, இம்மை, மறுமை ஆகியவற்றின் வாழ்வுக்குப் பிரபு நீரே ஆவீர். மெய்யாகவே, என்றும் மன்னிப்பவரும், அதி கருணைமிக்கவரும் நீரே ஆவீர்.

பிரபுவே, எனதாண்டவரே, உந்தன் நாமம் போற்றப்டுவமாக! எதன் மூலமாக அந்நேரம் வந்ததோ, மீண்டும் உயிர்த்தெழுதல் நிகழ்ந்ததோ, விண்ணிலும் மண்ணிலுமுள்ளோர் யாவரையும் பயமும் நடுக்கமும் பற்றிக் கொண்டதோ, அந்த உமது திருநாமத்தின் பெயரால், உம்பால் திரும்பியும், உமது சமயத்திற்கு உதவிட்ட உமது

ஊழியர்களின் இதயங்களைப் பரவசமடையக்-கூடியவை எவையோ அவற்றை, உமது இரக்கம் எனும் சுவர்க்கத்திலிருந்தும், உமது மென் கருணையெனும் மேகங்களிளிருந்தும், பொழிந்தருளுமாறு உம்மைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

என் பிரபுவே, உமது ஊழியர்களையும், உமது பணிப்பெண்களையும் பயனற்ற எண்ணங்கள், வீண் கற்பனைகள் என்னும் ஏவு கணைகளிலிருந்து பாதுகாத்து, உமது அருள் என்னும் கரங்களிலிருந்து மென்மையாக வழிந்திடும் உமது அறிவெனும் நீரினைப் பருகச் செய்வீராக.

நீர், உண்மையாகவே, எல்லாம் வல்லவர், அதி மேன்மைப்படுத்தப்பட்டவர், என்றும் மன்னித்-தருள்பவர், அதி கருணையாளர்.

அனைத்தும் அறிந்தவரும் எல்லாம் தெரிந்தவருமான கடவுளின் திருநூல்களில் வாக்களிக்கப்பட்டவருமான அவரது திருநாமத்தின் பேரில்! உமது அரியாசனத்தைச் சுற்றி வலம் வந்து, உமது முன்னிலையை அடைந்த ஊழியர்கள், உண்ணா நோன்பிருந்த அவ்வுண்ணா நோன்பு நாள்கள் வந்துவிட்டன. கூறுங்கள்: நாமங்களின் இறைவனே, விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தவரே! உமதன்பின் காரணமாகவும், உமது நல்விருப்பம் காரணமாகவும் உண்ணா நோன்பிருந்தும், உமது நூல்கள், நிருபங்கள் ஆகியவற்றில் நீர் கட்டளையிட்டுள்ளனவற்றைக் கடைப்பிடித்துமுள்ளோரின் நோன்பை ஏற்றுக்கொள்ளுமாறு சர்வ மகிமையாளர் எனும் உமது நாமத்தின் பேரால் நான் உம்மை வேண்டிக்கொள்கின்றேன். உமது சமயத்தை உயர்த்துவதற்கும், உமதன்பில் நான் நிலையாக இருப்பதற்கும், அவர்களின் பெயரால் உம்மை வேண்டுகிறேன்; அதனால் உமது படைப்பினங்களின் ஆர்ப்பரிப்பு என் காலடிகளைச் சறுக்கச் செய்திடாதிருக்குமாக. மெய்யாகவே, நீர் விரும்பிடும் எவற்றின் மீதும் அதிகாரம் செலுத்திடவல்லவர் நீரே. உயிர்ப்பூட்டுபவரும், சர்வ சக்திவாய்ந்தவரும், அதி கொடையாளரும், நாள்களுக்கெல்லாம் ஆதியானவருமான உம்மையன்றி கடவுள் வேறிலர்.

பிரபுவே எனதாண்டவரே, நீர் போற்றப்படுவீராக!

உமது ஒற்றுமையை அறிந்தோரின் இதயங்களைச் சுடர்விட்டு எரியச் செய்திட்ட அன்பெனும் அக்கினிக்கு உரியவரும், உமது திருவதனத்தின் பேரொளிகள், உமது அரசவையை நெருங்கிச் சென்றோரின் வதனங்களைப் பிரகாசிக்கச் செய்திட்டவரும் நீரே ஆவீர். என் கடவுளே, உமது அறிவெனும் ஓடை எத்துணை வளமானது! எனதன்பரே, உம்மீதுள்ள என் அன்பிற்காகவும், உம்பாலான நல்விருப்பம் காரணமாகவும், தீமை இழைப்போர் அம்புகளிலிருந்து நான் அனுபவிக்கும் வேதனை எத்துணை இனிமையானது! உமது பாதையிலும், உமது சமயத்தைப் பிரகடனம் செய்வதிலும் இறை நம்பிக்கையற்றோரின் வாள்களிலிருந்து நான் தாங்கிக்கொண்ட காயங்கள் எத்துணை இன்பமானவை!

அமைதியின்மையைச் சாந்தமாகவும், அச்சத்தை மனவுறுதியாகவும், வலுவின்மையை்ப் பலமாகவும், அவமானத்தைப் புகழாகவும், மாற்றியுள்ள உமது நாமத்தினால், வரம்புமீறியோர்களின் தாக்குதல்-களோ, நம்பிக்கையற்றோரின் கடுங்கோபமோ எங்களை அசைத்திடாத விதத்தில், உமது கிருபையைக் கொண்டு, நீர் என்னையும் உமது ஊழியர்களையும், உமது நாமத்தை மேன்மைப்படுத்திடவும், உமது செய்தியை வழங்கிடவும், உமது சமயத்தைப் பறைசாற்றிடவும் உதவிடுமாறு, என் அதிநேசரான உம்மிடம் நான் மன்றாடுகிறேன்.

என் பிரபுவே, உமது அழைப்புக்குச் செவிசாய்த்திட்ட, உம்மை நோக்கி விரைந்திட்ட, தன்னிடமிருந்தே தப்பிச் சென்ற, தனது இதயத்தை உம்மீது இளைப்பாறச் செய்திட்ட உமது பணிப்பெண் நானாவேன். என் பிரபுவே, உலகின் எல்லாச் செல்வங்களையும் வெளிக்கொணரச் செய்திட்ட உமது நாமத்தினால், உம்மீது நம்பிக்கை வைக்காது, உமது உண்மையை மறுத்திட்டோரின் சைகைகளிலிருந்து என்னைப் பாதுகாக்குமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

நீர் விரும்பியதைச் செய்வதற்கு சக்திப்-படைத்தவர் நீரே. மெய்யாகவே, அனைத்தையும் அறிந்தவரும், சர்வ விவேகியும் நீரே ஆவீர்.

பிரபுவே, எனதாண்டவரே, உந்தன் நாமம் மேன்மைப்படுத்தப்படுமாக!

உமது கருணையின் அற்புதங்களைப் பார்த்திட என் கண்கள் எதிர்பார்த்திருப்பதையும், உமது இனிய கீதங்களைச் செவிமடுக்க என் செவிகள் ஏங்கிக் கொண்டிருப்பதையும், உமது அறிவெனும் உயிர் நீர்களுக்காக என் இதயம் ஆவல்கொண்டிருப்பதையும் காண்பீராக. என் கடவுளே, உமது பணிப்பெண், உந்தன் கருணை எனும் வாசஸ்தலத்தின் முன் நின்று- கொண்டிருப்பதையும், மற்றெல்லா நாமங்களுக்கும் மேலானதாகத் தேர்ந்தெடுத்து, நீர் விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்திற்கும் மேலாக அமைத்துள்ள, உந்தன் நாமத்தைக் கொண்டு உம்மை அழைப்பதையும், நீர் காண்கின்றீர். உமது கருணை எனும் சுவாசங்களை அவள் மீது பொழிந்திடுவீராக; அதனால் அவள், பரவசத்தால் தன்னிடமிருந்தே முழுமையாக விலகிச் சென்றும், உமது வதனத்தின் ஒளியால் பிரகாசித்தும், உந்தன் அரசாட்சியின் கதிரொளியைத் திசையெங்கும் பொழிந்தும், உந்தன் அரியாசனத்தின் மீது ஸ்தாபித்துமுள்ள, அந்த இருக்கையை நோக்கி முழுமையாக ஈர்க்கப்படக்கூடும்.

என் பிரபுவே, உம்மை நாடிவந்தோரை வெளியேற்றி விடாதீர் எனவும், உம்மை நோக்கி அவர்களின் காலடிகளை எடுத்துவைத்தோரைத் துரத்தி விடாதீர் எனவும், உம்மை நேசிப்போர் அனைவரையும் உமது கிருபையை இழக்கச் செய்திடாதீர் எனவும், நான் உம்மிடம் கெஞ்சிக் கேட்கிறேன். என் பிரபுவே, அதி பரிவுடையவரான, கருணைக் கடவுள் என உம்மையே அழைத்துக்கொண்டவர் நீரே ஆவீர். ஆதலால், உமது புகலிடத்தை நாடி வந்துள்ள, உம்மை நோக்கித் தனது முகத்தைத் திருப்பியுமுள்ள உமது பணிப்பெண்ணின் மீது இரக்கங் காட்டுவீராக.

மெய்யாகவே, என்றென்றும் மன்னிப்பவரும், அதி கருணையாளரும் நீரே ஆவீர்.

பிரபுவே, எனதான்டவரே, நீர் போற்றப்படுவீராக! உந்தன் மென்கருணை எனும் மதுரசத்தை, உமது கிருபை எனும் கரங்களிலிருந்து பருகியும், உமது நாள்களில் உந்தன் அன்பெனும் நறுமணத்தைச் சுவைத்திட்ட இவன், உமது ஊழியனாவான். எந்தத் துயரமும், உமதன்பில் மகிழ்வதிலிருந்தோ, உந்தன் வதனத்தைக் கண்ணுறுவதிலிருந்தோ; மற்றும் கவனமின்மை எனும் சைனியங்கள் அனைத்தும் உமது நல்விருப்பம் எனும் பாதையிலிருந்து அவர்களை விலகச் செய்திட சக்தியற்று இருக்கின்றனவோ, அந்த உந்தன் நாமங்களின் திருவுருவான- வர்களினால், உம்மிடமுள்ள நற்பொருள்களை அவனுக்கு வழங்கியும், இவ்வுலகினை அவன் ஒரு கண்சிமிட்டலை விட விரைவாக மறைந்திடும் ஒரு நிழலாகக் கருதிடும் வகையில், அவனை அத்தகையச் சிகரங்களுக்கு உயர்த்திடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் கடவுளே, உமது அளவிடமுடியாத மாட்சிமையின் சக்தியைக் கொண்டு, நீர் வெறுத்திடும் அனைத்திலிருந்தும் அவனைப் பாதுகாப்பாக வைத்திடுவீராக. மெய்யாகவே, நீரே அவனது பிரபுவும், எல்லா உலகங்களின் பிரபுவும் ஆவீர்.

பிரபுவே, எனதாண்டவரே, உந்தன் நாமம் போற்றப்டுவதாக! உமது மென்கருணை எனும் கயிற்றைப் பிடித்துக் கொண்டும், உமது வள்ளன்மை எனும் அங்கியினைப் பற்றிக்கொண்டுமுள்ள உமது ஊழியன் நானே. அருவமும், உருவமுமான, எல்லாப் படைப்புப் பொருள்களையும் நீர் வசப்படுத்தி, எதன் மூலமாக உயிர் மூச்சாகவே இருக்கும் சுவாசமானது, படைப்பு முழுவதன் மீதும் வீசப்பட்டுள்ளதோ, அந்த உமது திருநாமத்தினால்; விண்ணுலகங்களையும் பூமியையும் சூழ்ந்துள்ள உமது சக்தியைக் கொண்டு என்னைப் பலப்படுத்துமாறும், எல்லா நோய்களிலிருந்தும், பேரிடர்களிலிருந்தும் என்னைக் காத்தருளுமாறும் நான் உம்மிடம் மன்றாடுகிறேன். எல்லா நாமங்களுக்கும் நீரே பிரபு என்றும், உமக்கு விருப்பமான எல்லாவற்றையும் விதித்திடுபவர் நீரே என்றும் நான் சாட்சியம் அளிக்கின்றேன். வல்லவரும், எல்லாம் அறிந்தவரும், சர்வ விவேகியுமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர்.

என் பிரபுவே, உமது உலகங்கள் ஒவ்வொன்றிலும் எனக்கு நன்மை பயப்பனவற்றை எனக்கு விதித்தருள்வீராக. ஆகையால், பழி சுமத்துவோனின் பழிப்போ, நாஸ்திகனின் இரைச்சலோ, உம்மிடமிருந்து விலகிச் சென்றோரின் பேதமோ, உந்தன்பால் திரும்புவதிலிருந்து தடுத்திடா-தோரான உமது உயிரினங்கள் மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கென நீர் எழுதியுள்ள-வற்றை எனக்கும் வழங்கிடுவீராக.

உண்மையாகவே, உமது அரசாட்சி எனும் சக்தியைக் கொண்டு ஆபத்தில் உதவுபவர் நீரே ஆவீர். வல்லவரும், அதி சக்திமிக்கவருமான, உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.

என் இறைவா, நாள்களுக்கெல்லாம் அரசனான அந் நாளினை, உமது தேர்ந்தெடுக்கப்-பட்டோருக்கும் உமது அவதாரங்களுக்கும் நீர், உமது அதி சிறந்த நிருபங்களில் அறிவித்த நாளான, அந் நாளினை, உமது படைப்புப் பொருள்கள் அனைத்தின் மீதும் உமது அனைத்து நாமங்கள் ஒளியின் பிரகாசத்தினைப் பொழிந்த நாளான, அந் நாளினை, நீர் வெளிப்படுத்தியமைக்காக உமது நாமம் போற்றப்படுமாக. எவரொருவர் உந்தன்பால் திரும்பி, உமது முன்னிலையை அடைந்து, உமது குரலின் தொனிகளைக் கண்டு கொள்கின்றாரோ, அவரது ஆசீர்வாதம் மிகுதியானதாகும்.

உமது திருவாக்கினை உமது ஊழியர்களிடையே மேன்மைப்படுத்திடவும், உமது படைப்பினங்களின் மத்தியில் உமது புகழினைப் பறைசாற்றிடவும் நீர் உமக்கு விருப்பமானவர்களை அருள்கூர்ந்து உதவிடுமாறு, உமது நாமங்கள் என்னும் இராஜ்யத்தினைப் பக்தியுடன் வலம் வருகின்ற அவரது நாமத்தின் பேரில் உம்மை வேண்டிக் கொள்கின்றேன்; அதனால், உமது மண்ணில் வாழும் அனைவரின் ஆன்மாக்களையும் உமது வெளிப்பாட்டின் பேருவகை நிரப்பக் கூடும்.

என் பிரபுவே, உமது அருள் என்னும் ஜீவ நீரினால் அவர்களை நீர் வழிநடத்திச் சென்றுள்ளதால் உம்மிடமிருந்து அவர்கள் ஒதுக்கப்படாமலிருக்க உமது வள்ளன்மையின் வழியாக அவர்களுக்கு அருள்புரிவீராக; உமது அரியாசனத்தின் இருப்பிடத்தின்பால் நீர் அவர்களை அழைத்-திருப்பதனால், உமது அன்புக் கருணையினால் அவர்களை உமது முன்னிலையிலிருந்து துரத்திடாதீர். உம்மைத் தவிர மற்றெல்லாவற்றில் இருந்தும் முற்றாகப் பற்றறுக்கச் செய்திடும் அதனை அவர்கள்பால் அனுப்பி அவர்களை உமது அண்மை என்னும் மண்டலத்தில் சிறகடித்துப் பறந்திடச் செய்வீராக. அதனால் கொடுமை-யாளனின் ஏற்றமோ, அதி மாட்சிமையுடையவரும் அதி வலிமை வாய்ந்தவருமான உம்மை நம்பாதார்களின் தூண்டுதல்களோ அவர்களை உம்மிடமிருந்து தடுக்காதிருக்குமாக.

என் பிரபுவே, என் நம்பிக்கையே! உமது அன்பர்களை உமது வலுமிகு ஒப்பந்தத்தில் உறுதியுடன் இருக்கவும், உமது தெளிவான சமயத்தின்பால் விசுவாசமுடன் இருக்கவும், பிரகாசங்கள் என்னும் திருநூலில் நீர் விதித்துள்ள கட்டளைகளை நிறைவேற்றவும், அவர்களுக்கு உதவிடுவீராக; அதனால் அவர்கள் வழிகாட்டுதல் என்னும் விருதுக்கொடிகளாகவும், விண்ணுலகத் திருக் கூட்டத்தினரின் விளக்குகளாகவும், உமது முடிவில்லா மெய்யறிவு என்னும் ஊற்றுகளாகவும், தெய்வீக வானிலிருந்து ஒளிர்ந்தவாறு நேர்வழி காட்டிடும் விண்மீன்களாகவும் ஆகக் கூடும்.

மெய்யாகவே, நீரே வெற்றி கொண்டிட இயலாதவர், எல்லாம் வல்லவர், சர்வ சக்தி வாய்ந்தவர்.

என் கடவுளே, நீர் போற்றப்படுவீராக. நான் உந்தன் மீதும் உமது அடையாளங்களின் மீதும் நம்பிக்கைக் கொண்ட ஊழியர்களுள் ஒருவனாவேன். எவ்வாறு உந்தன் கருணை எனும் கதவை நோக்கி நான் புறப்பட்டுள்ளதையும், மற்றும் உந்தன் அன்புக் கருணை எனும் திசையை நோக்கி என் முகத்தைத் திருப்பியுள்ளதையும் நீர் பார்க்கின்றீர். உமது மிகச் சிறந்த பட்டங்களினாலும், உமது அதிவுயரிய பண்புகளினாலும், உமது அருட்கொடைகள் எனும் வாயில்களை எனது வதனத்தின் முன் திறந்திடுமாறு நான் உம்மிடம் கெஞ்சுகின்றேன். ஆகவே, எல்லா நாமங்களையும் பண்புகளையும் கொண்டுள்ளவரே, எது நன்மையோ அதைச் செய்திட எனக்கு உதவிடுவீராக!

என் பிரபுவே, வறியவன் நான், நீரோ செல்வந்தர். என் முகத்தை நான் உந்தன்பால் திருப்பி, உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் என்னைப் பற்றறுத்துக் கொண்டுவிட்டேன். உந்தன் மென்கருணை எனும் தென்றல்கள் என்னை வந்தடைவதைத் தடுத்திடாதீர்; மற்றும் உமது ஊழியர்களுள் தேர்ந்தெடுக்கப் பட்டோருக்கென நீர் விதித்தருளியவற்றை எனக்குத் தரமறுத்திடாதீர் எனவும் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

என் பிரபுவே, எனது கண்களிலிருந்து திரையை அகற்றிடுவீராக; அதனால் உமது உயிரினங்களுக்கென நீர் விரும்பியவற்றை நான் கண்டுகொள்ளக் கூடும்; உந்தன் கைவினையான அவதாரங்கள் அனைவரிலும், உந்தன் சர்வ வலிமைமிக்கச் சக்தியின் வெளிப்பாடுகளை நான் கண்டறிந்திடக் கூடும். என் பிரபுவே, உமது அதி வலிமைமிக்க அடையாளங்களைக் கொண்டு என் ஆன்மாவை ஆனந்தப் பரவசமடையச் செய்வீராக; மேலும், என் இழிவான, தீய ஆசைகளின் ஆழங்களிலிருந்து என்னை மீட்டருள்வீராக. பின்னர், நீர் விரும்பியவற்றைச் செய்வதற்குச் சக்தி படைத்தவர் நீரே ஆவீர். மனிதர் அனைவரும் நாடிடும் உதவியை வழங்கிடுபவர் உம்மைத் தவிர, சர்வ ஒளிமயமான கடவுள் வேறிலர்.

என் பிரபுவே, என் உறக்கத்திலிருந்து என்னை எழுப்பி, என்னை உற்சாகம் பெறச் செய்து, உமது ஊழியர்களுள் பெருவாரியானோர் புரிந்து- கொள்ளத் தவறியவற்றை உணர்ந்திட, என்னுள் ஆவலை உருவாக்கியமைக்காக, நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆதலால், என் பிரபுவே, உந்தன் மீதுள்ள அன்புக்காகவும், உமது மகிழ்ச்சிக்காகவும், நீர் ஆவல் கொண்டுள்ள எதனையும் என்னால் கண்ணுற இயலச் செய்திடுவீராக. எவரது வலிமை, இறையாண்மை ஆகியவற்றின் சக்திக்கு எல்லாப் பொருள்களும் சாட்சியம் அளிக்கின்றனவோ, அவர் நீரே ஆவீர்.

வல்லவரும் நலன் பயப்பவருமான உம்மைத் தவிர கடவுள் வேறிலர் .

எனது கடவுளும், பொருள்கள் அனைத்தின் கடவுளுமானவரே, எனது புகழொளியும் பொருள்கள் அனைத்தின் புகழொளியுமானவரே; எனது ஆவலும் எல்லாப் பொருள்களின் ஆவலுமானவரே, எனது பலமும் எல்லாப் பொருள்களின் பலமுமானவரே, எனது மன்னரும் எல்லாப் பொருள்களின் மன்னருமானவரே, எனது உடைமையாளரும் எல்லாப் பொருள்களின் உடைமையாளருமானரே, எனது நோக்கமும் எல்லாப் பொருள்களின் நோக்கமுமானவரே, என்னை அசைப்பவரும், எல்லாப் பொருள்களின் அசைப்பாளருமானவரே, உந்தன் நாமம் போற்றப்படுமாக. உமது மென்கருணை எனும் சமுத்திரத்திலிருந்து விலகியும், உமது அண்மை எனும் கரைகளிலிருந்து வெகுதூரம் ஒதுங்கியும் நான் இருந்திடாதிருக்கச் செய்வீரென, உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் பிரபுவே, உம்மைத் தவிர வேறெதுவும் எனக்குப் பயனளிக்காது; உம்மைத் தவிர வேறெவருடனான அண்மையும் எனக்கு நன்மையளிக்கப் போவதில்லை. உம்மைத் தவிர மற்றனைத்தையும் நீர் தவிர்த்திடச் செய்துள்ள உமது செல்வங்களின் மிகுதியினால், உம்பால் தங்கள் வதனங்களைத் திருப்பியும், உமக்குச் சேவை செய்வதற்காக முன்னெழுந்துள்ளவர்களுள் ஒருவனாக என்னையும் சேர்த்துக் கொள்வீர்களாக.

ஆதலால், என் பிரபுவே, உமது ஊழியர்களையும், உமது பணிப்பெண்களையும் மன்னித்தருள்வீராக. உண்மையாகவே, நீரே என்றும் மன்னிப்பவர், அதி இரக்கமுடையவர்.

என் கடவுளே, எண்ணற்ற உணர்வில்லா இதயங்கள், உந்தன் சமயம் எனும் தீயினால் தீமூட்டப்பட்டுள்ளன; எண்ணற்ற உறங்குவோர் உமது குரலின் இனிமையால் உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்டுள்ளனர். உந்தன் ஒருமை எனும் விருட்சத்தின் நிழலின் கீழ் பாதுகாப்பை நாடிய அந்நியர்கள்தாம் எத்துணை; உமது நாள்களில் உந்தன் உயிர் நீரின் ஊற்றைத் தேடி தாகத்தோடு விரைந்திட்ட தாகமுற்றோரின் எண்ணிக்கைதாம் எத்துணையோ.

உம்மை நோக்கிச் செல்ல தன்னை ஆயத்தமாக்கிக்கொண்டு, உந்தன் வதனம் எனும் ஒளியின் பகலூற்றை அடைந்திட விரைந்திட்டவன் ஆசி பெறுவானாக.

உந்தன் திருவெளிப்பாடெனும் உதய பீடத்தின்பாலும், உந்தன் உத்வேகம் எனும் நீரூற்றின்பாலும், தனது பற்றார்வம் அனைத்தையும் கொண்டு திரும்பியவன் ஆசி பெறுவானாக.

உந்தன் வள்ளன்மை, கிருபை ஆகியவற்றின் வாயிலாக நீர் அருளியவற்றை உமது பாதையில் செலவு செய்தவன் ஆசி பெறுவானாக.

உந்தன் மீதான அவனது ஆழ்ந்த ஏக்கத்தின் காரணமாக, உம்மைத் தவிர மற்றனைத்தையும் வீசியெறிந்தவன் ஆசி பெறுவானாக.

உமது நெருக்கமான தொடர்புறவில் மகிழ்ந்து, உம்மைத் தவிர மற்றவரின் மீதான எல்லாப் பற்றுக்களையும் தன்னிடமிருந்தே அகற்றியவன் ஆசி பெறுவானாக.

உந்தன் திருநாமமாக இருப்பவரினால்; உமது இறையாண்மை, வல்லமை ஆகிய சக்தியின் வாயிலாகத், தமது சிறை எனும் தொடுவானத்தின் மேல் தோன்றியுள்ளவரினால், நீர் விரும்பிய- வற்றையும், உந்தன் மேன்மைக்கு உகந்தவற்றையும் அனைவருக்கும் விதித்தருளுமாறு, நான் உம்மிடம் மன்றாடுகின்றேன்.

மெய்யாகவே, உந்தன் வல்லமை யாவற்றுக்கும் சமமானதாகும்.

பிரபுவே, என் இறைவா, ஒளி உமக்கே உரியதாகட்டும்! உமது மாட்சிமைமிகு வலிமை என்னும் நதியினைப் புலனாக்குவீராக; அதனால் உமது ஒருமை என்னும் நீர், அனைத்துப் பொருள்களின் மெய்ம்மையிலிருந்து அந்தளவு சுரந்தொழுகிடுமாக; அதனால் உமது தவறா வழிகாட்டுதல் என்னும் கொடி உமது கட்டளை என்னும் இராஜ்யத்தில் உயர ஏற்றப்பட்டு, தெய்வீகச் சுடரொளி வீசிடும் விண்மீன்கள் உமது மாட்சிமை என்னும் சுவர்க்கத்தினில் பிரகாசித்திடுமாக. உமக்கு விருப்பமானதைச் செய்திடும் ஆற்றல் படைத்தவர் நீரே. மெய்யாகவே, ஆபத்தில் உதவுபவரும், சுயஜீவியரும் நீரே ஆவீர்.

என் கடவுளே, ஒளி உமக்கே உரியதாகுக! உந்தன் வதனத்தை நோக்கியே என் வதனம் செலுத்தப்பட்டுள்ளது; மெய்யாகவே, உந்தன் வதனமே எனது வதனமாகும், உந்தன் அழைப்பே எனது அழைப்பாகும், உந்தன் திருவெளிப்பாடே எனது திருவெளிப்பாடாகும், உந்தன் உள்ளமையே, எனது உள்ளமையாகும்; உந்தன் சமயமே எனது சமயமாகும், உந்தன் கட்டளையே எனது கட்டளையாகும், உந்தன் உயிருருவே எனது உயிருருவாகும், உந்தன் மாட்சிமையே, எனது மாட்சிமையாகும், உந்தன் புகழொளியே எனது புகழொளியாகும், உந்தன் சக்தியே, எனது சக்தியாகும்.

உந்தன் கற்புடைமை எனும் கூடாரத்தினுள் உமது பணிப்பெண்களைப் பாதுகாத்து, உந்தன் நாள்களுக்குத் தகுதியற்றவையான அவர்களின் செயல்களை இரத்து செய்யுமாறு, நாடுகளின் அமைப்பாளரும், நித்தியத்தின் மன்னருமாகிய உம்மிடம் நான் மன்றாடுகிறேன். எனவே, என் கடவுளே, அவர்களிடமிருந்து எல்லா சந்தேகங்-களையும், வீண் கற்பனைகளையும் அகற்றி; நாமங்களின் பிரபுவும், வாய்ச்சொல்லின் மூலமுமானவரே, உம்முடனான அவர்களின் உறவுக்குப் பொருந்தாத அனைத்திலிருந்தும் அவர்களைப் புனிதப்படுத்துவீராக. படைப்பு முழுவதன் அதிகாரத்தை உந்தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பவர் நீரே ஆவீர்.

சர்வ வல்லவரும், அதி மேலானவரும், சர்வ ஒளிமயமானவரும், சுய ஜீவியருமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர்.

என் கடவுளே, நீர் போற்றப்படுவீராக! உந்தன் அரியாசனத்தின் பகலூற்றானவரையும், உமது கிருபையின் உதயபீடமானவரையும், உந்தன் சமயத்தின் களஞ்சியமானவரையும் அடியேன் அறிந்திடும்படி செய்தமைக்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். உமது அருகில் உள்ளோரின் வதனங்களை வெண்ணிறமாக மாற்றியும், உம் மீது பக்திகொண்டோரின் இதயங்கள் உம்மை நோக்கிச் சிறகடித்துச் சென்றிடவும் செய்திட்ட, உமது திருநாமத்தின் வாயிலாக நான் உம்மிடம் மன்றாடுகிறேன்; அதனால் நான், எல்லா நேரங்களிலும், எல்லா நிலைகளிலும், உந்தன் கயிற்றை இறுகப் பற்றிக்கொண்டு, உம்மைத் தவிர, எவரொருவரிடமும் உள்ள பற்றுகள் எல்லா-வற்றையும் துறந்து, உந்தன் திருவெளிப்பாட்டின் தொடுவானத்தை நோக்கி, எனது கண்களைச் செலுத்தி, உமது நிருபங்களில் நீர் எனக்கு ஆணையிட்டுள்ளவற்றை நிறைவேற்றிடக் கூடும்.

என் பிரபுவே, எனது அக, புற உயிருரு இரண்டையும் உந்தன் தயை மற்றும் உந்தன் அன்புக் கருணை எனும் வஸ்திரத்தைக் கொண்டு அணிவிப்பீராக. பின்னர், உமக்கு அருவருக்கத்தக்க எதனிலிருந்தும் என்னைப் பாதுகாப்பாக வைப்பீராக; மேலும், என்னையும் எனது உடன்பிறப்புக்களையும் உமக்குக் கீழ்ப்படியவும், என்னுள் தீய அல்லது இழிவான ஆசைகளைத் தூண்டிடும் எதனையும், வெறுத்தொதுக்கக் கருணைகூர்ந்து உதவிடுவீராக.

மெய்யாகவே, மனுக்குலம் அனைத்திற்கும் பிரபுவானவரும், இம்மை, மறுமை ஆகியவற்றின் உடைமையாளரும் நீரே ஆவீர். எல்லாம் அறிந்தவரும், சர்வ விவேகியுமான உம்மைத் தவிர இறைவன் வேறிலர்.

பிரபுவே, என் இறைவா, நீர் போற்றப் படுவீராக! துரிதமாக முன்னேறிடும் உமது அருள் என்னும் காற்றின் மூலமாகவும், உமது நோக்கத்தின் பகலூற்றானவர்களின் மூலமாகவும் உமது அகத் தூண்டலின் உதயபீடங்களானோரின் மூலமாகவும் என் மீதும் உமது வதனத்தைத் தேடினோரின் மீதும் உமது தாராளத் தன்மைக்கும் வள்ளன்மைமிகு அருளுக்கும் பொருந்தவும், உமது வழங்குகைக்கும் தயைக்கும் தகுதியானவற்றை அனுப்பி-யருளுமாறு நான் உம்மைப் பரிந்து கேட்கின்றேன். நான் வறியவனாகவும் துணையற்றவனாகவும் இருக்கின்றேன். என் பிரபுவே, உமது செல்வம் என்னும் சமுத்திரத்தில் என்னை மூழ்கச் செய்வீராக; தாகமுற்றிருக்கிறேன், உமது அன்பாதரவு என்னும் ஜீவ நீரிலிருந்து என்னைப் பருகச் செய்வீராக.

உமது சொந்த மெய்நிலையின் மூலமும் உமது திருவுருவின் பிரதிநிதியாக நீர் நியமித்துள்ள அவதாரத்தின் மூலமும் விண்ணிலும் மண்ணிலுமுள்ளோர் அனைவருக்குமான உமது தனிச் சிறப்பார்ந்த திருவாக்கின் மூலமும் உமது அருள்மிகு கடாட்சம் என்னும் விருட்சத்தின் நிழலின்கீழ் உமது ஊழியர்களை ஒன்று திரட்டுமாறு நான் உம்மை வேண்டிக் கொள்கிறேன். ஆகவே, அதன் கனிகளை உட்கொள்ளவும் அதன் இலைகளின் சலசலப்பையும் அதன் கிளைகளின் மீதமர்ந்து கீதம் பாடிடும் அப் பறவையின் குரலின் இனிமையையும் செவிமடுத்திட அவர்களுக்கு உதவிடுவீராக. நீர், மெய்யாகவே, ஆபத்தில் உதவுபவர், அடைந்திடவியலாதவர், எல்லாம் வல்லவர், அதி வள்ளன்மை வாய்ந்தவர்.

என் கடவுளே, உந்தன் நாமம் போற்றப்படுமாக! உமது ஆணைக்கிணங்கியும், உமது ஆசைக்கு ஏற்றவாறும் படைப்பு முழுவதன் மீதும் பரவியுள்ள உமது கிருபை எனும் வஸ்திரத்தின் நறுமணங்களினாலும், உந்தன் வலிமை, உந்தன் இறையாண்மை ஆகிய சக்தியின் வாயிலாகவும், உந்தன் கருணை எனும் தொடுவானத்தின் மேல் பிரகாசமாக ஒளிவீசிய உமது விருப்பம் எனும் பகல் நட்சத்திரத்தினாலும், என் இதயத்திலிருந்து பயனற்ற எல்லா ஆசைகளையும் வீண் கற்பனைகளையும் நீக்கியருளுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன். மனுக்குலம் அனைத்தின் பிரபுவே, அதனால், எனது அனைத்துப் பாசத்தோடும் நான் உந்தன்பால் திரும்பிடக்கூடும்.

என் கடவுளே, நான் உமது ஊழியனும், உமது ஊழியனின் மைந்தனுமாவேன். நான் உந்தன் கிருபை எனும் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டும், உந்தன் மென்கருணை எனும் கயிற்றினை இறுகப்பற்றி கொண்டுமுள்ளேன். உம்மிடம் இருக்கும் நல்லனவற்றை எனக்கு விதித்தருள்வீராக; உந்தன் அருட்கொடை எனும் மேகங்களிலிருந்தும், உந்தன் தயை எனும் சொர்க்கத்திலிருந்தும் நீர் கீழே அனுப்பியுள்ள மேஜையிலிருந்து எனக்கு ஊட்டமளிப்பீராக.

உண்மையில், உலகங்களுக்கெல்லாம் பிரபுவும், சொர்க்கத்தில் உள்ள அனைத்திற்கும், பூமியின் மீதுள்ள அனைத்திற்கும் கடவுள் நீரே ஆவீர்.

பிரபுவே எனதாண்டவரே, நீர் மகிமைப்படுத்தப்படுவீராக! யாவும் உமது அழகிலிருந்து திரும்பிச் சென்றுவிட்ட இவ்வேளையில், உமது சமயத்தை வெளிப்படுத்தியவரான அவரிடமிருந்து அலட்சியமாகத் திரும்பிச் சென்றுள்ள இந்நாள்களில், நான் உம்மை நினைவுக்கூர்ந்து, உமது புகழைப் பாடிடவும் எனக்கு அருள் கூர்ந்திடுவீர் என்றும், உந்தன் உண்மையை மறுத்திட்ட உமது உயிரினங்களால் கடுமையாகத் தாக்கப்பட்டும், எந்த நாவும் வருணிக்கவியலாத துயரங்களால் சூழப்பட்டுமுள்ள, உம்மை உந்தன் அதி உயரிய நாமமானவரை நான் மன்றாடிக் கேட்கின்றேன்.

உமதன்பையும், உமது நினைவையும் உறுதியாகப் பற்றிக்கொள்வதற்கு என்னை இயலச் செய்வீராக என நான் உம்மிடம் மன்றாடுகிறேன். மெய்யாகவே, இது என் சக்திக்குட்பட்டதாகும்்; என்னுள் இருப்பவை அனைத்தையும் அறிந்தவரும் நீர் ஒருவரே ஆவீர். உண்மையாகவே, நீரே யாவற்றையும் மதிப்பிட்டு, அறிந்தவர். என் பிரபுவே, உலக முழுமையும் ஒளிரச் செய்துள்ள, உந்தன் வதன ஒளியின் பிரகாசங்களை என்னை இழந்திடும்படிச் செய்திடாதீர். அதி சக்திவாய்ந்தவரும், சர்வ ஒளிமயமானவரும், என்றும் மன்னிப்பவருமான இறைவன், உம்மைத் தவிர வேறிலர்.

எவரது வதனம் என் ஆராதனையின் இலக்காக இருக்கின்றதோ, எவரது அழகு என் சரணாலயமாக இருக்கின்றதோ, எவரது வாசஸ்தலம் என் இலக்காக இருக்கின்றதோ, எவரது போற்றுதல் என் நம்பிக்கையாக இருக்கின்றதோ, எவரது பாதுகாப்பு என் தோழனாக இருக்கின்றதோ, எவரது அன்பு என் ஜீவனுக்கு உயிராக இருக்கின்றதோ, எவரைப் பற்றிப் பேசுவது எனக்கு ஆறுதலாக இருக்கின்றதோ, எவரது அண்மை என் ஆவலாக இருக்கின்றதோ, எவரது முன்னிலை எனது ஆழ்ந்த நேசமும், அதியுயரிய ஆவலுமாக இருக்கின்றதோ, அவ்வனைத்துக்கும் உரியவரே, உமது ஊழியர்களுள் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு நீர் விதித்தருளியவற்றைப் பெறுவதிலிருந்து என்னைத் தடுத்துவிடாதீர் என நான் உம்மிடம் மன்றாடுகிறேன். அதன்பின், எனக்கு இம்மையிலும் மறுமையிலும் உள்ள நன்மைகளைத் தந்தருள்வீராக.

உண்மையாகவே, நீரே, மனிதர்களுக்கெல்லாம் மன்னராவீர். என்றென்றும் மன்னித்தருளும், அதி தாராளமிகு இறைவன் உம்மையன்றி வேறிலர்.

##சுருக்கமான கட்டாயப்பிரார்த்தனை

*(இப்பிரார்த்தனையை பஹாய்கள் தினசரி ஒரு முறை, மதியத்திலிருந்து சாயங்காலத்திற்குள் கூற வேண்டும்)

என் கடவுளே, தங்களை அறிந்து வழிபடுவதற்கெனவே என்னைப் படைத்திருக்கின்றீர் என்பதற்கு நானே சாட்சி. இத்தருணம் என் பலவீனத்திற்கும் உந்தன் வல்லமைக்கும், என் வறுமைக்கும் உந்தன் செல்வாக்கிற்கம் சாட்சியம் கூறுகிறேன். ஆபத்தில் உதவுபவரும், தனித்தியங்க வல்லவரும் தாங்களன்றி வேறெவருமிலர்.